டெங்கு மரணம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
டெங்கு, சிக்கன்குனியாவால் மரணமடைந்தவர்கள் பட்டியல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: டெங்கு, சிக்கன்குனியாவால் உயிரிழந்தவர்கள் பட்டியல் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து விட்டது. வெயில் புழுக்கம் ஒருபக்கம் தாக்கி வரும் நிலையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து உறங்க முடியவில்லை காரணம் கொசுக்கள்.
கொசுக்கடியில் பாதிக்கப்படும் மக்கள் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியாவினால் பாதிக்கப்படுகின்றனர். மர்மக்காய்ச்சல் என்று மூடி மறைத்து விடுகிறது அரசு.
இந்தியாவில் கடந்த ஆண்டில் 1,04, 935 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தனர். இதில், 221 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில், 2,456 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.இதில், ஆறு பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 12 ஆயிரம் பேருக்கு சிக்குன் குன்யா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தேசிய நோய்க் கட்டுப்பாடு அமைப்பு கூறியுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கோர் உயிரிழந்துள்ளனர். கோவை, திருப்பூரில் டெங்குவினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மர்ம காய்ச்சலுக்கு கடந்த ஆண்டில் குழந்தைகள் உள்பட நூற்றுகணக்கானோர் பலியாகி வருகின்றன.
இதனிடையே ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில்,
தமிழகத்தில் பல மணி நேர மின்வெட்டு இருப்பதால், மின் சாதனங்களை பயன்படுத்த முடியாமல், பெரும்பாலான மக்கள் கொசுக் கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு பொதுநல வழக்கு மையத்தின் மேலாண்மை அறங்காவலர் கே.கே.ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியாவில் கொசு மூலம் பரவக்கூடிய நோய்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. அதனால், கொசுக்கள் கடிக்காமல் பாதுகாத்தாலே கொசு மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்தலாம்.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் டெங்கு,சிக்கன் குன்யா மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலியானார். ஆனால், அதற்கு காரணமான கொசுவை ஒழிக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், கொசுக்களை ஒழிப்பதற்கு உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், அதற்கான நடவடிக்கையை அரசு பின்பற்றவில்லை.
ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை பேரையூர், வாணியம்பாடி பகுதியில் கொசுவால் பரவும் டெங்கு உள்ளிட்ட பல நோய்களுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் அவர்களுக்கென தனி வார்டு அமைக்கவில்லை. சாதாரண சிகிச்சையை அளிக்கப்பட்டு வருகிறது.
அதனால், தமிழகம் முழுவதும் கொசுக்களை ஒழிப்பதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கொசு வலை வழங்க வேண்டும். டெங்கு,சிக்கன்குன்யா மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு,24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வர வேண்டும். அந்த நோய்களுக்கான மருந்து, மாத்திரைகளை இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. அவர் விடுத்துள்ள உத்தரவில், ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் மாவட்ட ரீதியாக டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் பட்டியலை விரிவான அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.