அரசியல் கணக்கு போட்டு அப்பல்லோ வந்தாரா ராகுல்? வாசனை வைத்து மிரட்டிய திமுகவுக்கு காங். வைத்த 'செக்'!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து 'கேட்டறிய' தனி விமானத்தில் டெல்லி டூ சென்னை வந்திறங்கிய ராகுல் காந்தியின் நடவடிக்கை வெறும் அரசியல் நாகரீகம்தானா, அதையும் தாண்டி திமுகவுக்கு வைக்கப்பட்ட செக்தானா என்று விவாதம் கிளம்பியுள்ளது.
நடைபெறவிருந்த, உள்ளாட்சித் தேர்தலில் சொற்ப வார்டுகளையே காங்கிரசுக்கு தள்ளி விட்டது திமுக. இதனால் திமுக மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் திருநாவுக்கரசர்.
கடந்த வாரம் திமுக பொருளாளர், ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்தபோது கூட, சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு 8 வார்டுகளை ஒதுக்கியிருப்பது மிகவும் குறைவானது என திருநாவுக்கரசர் வாதிட்டுள்ளார்.
எனவேதான், 14 வார்டுகளை ஒதுக்க முன்வந்தார் ஸ்டாலின். அப்போதும் திருநாவுக்கரசர், தேசியக்கட்சியான நாங்கள் பெரிய கட்சியும் கூட, எங்களுக்கு இது போதாது என இழுத்துள்ளார் திருநாவுக்கரசர்.
"பெரிய கட்சியா இருப்பதால் நீங்கள், தனித்து கூட நிற்கலாமே. நாங்க வருத்தப்பட மாட்டோம்" என்று ஸ்டாலின் தடாலடியாக கூறிவிட்டாராம்.
இந்த வருத்தத்துடன் அன்று இரவே, ஆளும் கட்சிக்கு நெருக்கமான பெசன்ட்நகர் புள்ளியை திருநாவுக்கரசர் சந்தித்துள்ளார். பேச்சுவாக்கில், பெசன்ட்நகர் புள்ளி, முதல்வரின் உடல்நிலையை காரணமாக வைத்து, அதிமுகவை, பாஜக மேலிடம் ஆட்டி வைக்க பார்க்கிறது. காங்கிரஸ் கைகொடுத்தால் அதிமுக எதிர்த்தடிக்க தயார் என்றாராம்.
இதை ராகுலிடம் தெரிவித்துள்ளார் திருநாவுக்கரசர். எதிர்காலத்தில் கூட்டணி நிலைமை மாறலாம். நாடாளுமன்றத் தேர்தலில் கூட அ.தி.மு.க. வோடு நாம கூட்டுவைக்க நேரலாம். மாநில அதிகாரத் தில் நாம பங்கெடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்ப றாங்க. அதனால் அ.தி.மு.க.வுடன் ஓர் இணக்கத்தை நாம் உருவாக்கி வச்சிக்கணும், என்று திருநாவுக்கரசர் கூறியதாக தெரிகிறது.
இதன்பிறகே, ஜெயலலிதா விரைவில் குணம் பெற வேண்டும் என்று ராகுல் காந்தி டிவிட்டரில் வாழ்த்து சொல்லியிருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே வியாழக்கிழமை இரவு டெல்லியில் சோனியாகாந்தி, மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் ராகுல் காந்தியும் உடனிருந்தார். அப்போது தமிழக முதல்வர் ஜெ. உடல்நிலை மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாஜக தலைவர்கள் யாராவது ஜெ. அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்களா என்று கேட்டதற்கு யாரும் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர். உடனே சென்னை சென்று ஜெயலலிதாவின், உடல் நிலை குறித்து நேரில் விசாரித்து வருமாறு ராகுல் காந்தியிடம் சோனியா கூறியதையடுத்து இன்று திடீரென ராகுல் காந்தி அப்பல்லோ வந்து சென்றுள்ளார்.
சென்னை வந்த ராகுல் காந்தி, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் சென்றதும், முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸை புறக்கணித்த திமுகவுக்கு டெல்லி செக் வைக்க பார்ப்பதாக கூறுகிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசனை, திடீரென ஸ்டாலினை சந்திக்க வைத்து, காங்கிரசை கூட்டணிக்கு படிய வைத்ததை போல, இப்போது ஜெயலலிதாவை ராகுல் காந்தி பார்த்துவிட்டு சென்று பதிலடி கொடுத்துள்ளார் என்கிறார்கள்.