விவேக்கின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம்... வருமான வரித்துறை அதிரடி
ஜெயா டிவி சிஇஓ விவேக்கின் வங்கி கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: ஜெயா டிவி சிஇஓ விவேக்கின் வங்கி கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை அவர் நிர்வகித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
சசிகலாவிற்கு நெருக்கமாக இருக்கும் பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் 190க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.
ஈக்காட்டுதாங்கலில் இருக்கும் ஜெயா டிவி அலுவலகத்திலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். ஜெயா டிவி சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சசிகலா உறவினர் இளவரசியின் மகன் விவேக் தான் இதை நிர்வகித்து வருகிறார்.
மேலும் விவேக் நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை, அவருக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் இந்த சோதனையின் மூலம் அவர் வெவ்வேறு வங்கிகளில் 100க்கும் மேற்பட்ட கணக்குகளை நிர்வகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து கணக்குகளும் முறைகேடாக ஆரம்பித்தது இருப்பது தெரிய வந்து இருக்கிறது. தற்போது இந்த கணக்குகள் அனைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.