துறைமுகம் அருகே 4 கன்டெய்னர்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள்?.. ஆர்.கே.நகரில் விநியோகிக்கவா?
சென்னை: சென்னை துறைமுகத்தில் உள்ள 4 கன்டெய்னர் லாரிகளில் கள்ளநோட்டுகள் அல்லது தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் ஏதேனும் இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
32 இடங்களில் சரக்கு பெட்டக நிலையங்கள் உள்ளன. இங்குதான் கன்டெய்னர்கள் வைக்கப்பட்டு இருக்கும். அந்த இடங்களிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. மார்ச் 1-ஆம் தேதிக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ள கன்டெய்னர்களில்தான் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை துறைமுகம் அருகே ஜீரோ கேட் வழியாக வாகனங்கள் சென்று வரும் வழியானது நேற்று முதல் அடைத்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே கன்டெய்னர்கள் நின்றிருப்பதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
துறைமுகத்துக்கு வந்த கன்டெய்னர்களில் கள்ளநோட்டுகள் வந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வருவாய் புலனாய்வு துறையினர் துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களில் சோதனையிட்டு வருகின்றனர்.
அதேசமயம், இந்த கண்டெய்னர்களில் புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும் இன்னொரு பரபரப்பு கிளம்பியுள்ளது.
ஆர்.கே .நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ஹாவாலா பணம் வரவழைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கும் கண்டெய்னர் லாரிகளுக்கும் ரொம்பப் பொருத்தம் என்பதால் எதையும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.