விஜயபாஸ்கரை சிக்க வைத்த கல்குவாரி ஆவணங்கள்.. வருமான வரித்துறை மீண்டும் சம்மன்
அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அமைச்சர் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: கல்குவாரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
எம்எல்ஏக்கள் விடுதியில் நடைபெற்ற சோதனையில் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்றதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதே நாளில் புதுக்கோட்டையில் உள்ள அமைச்சரின் வீடு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. துணை ராணுவப்படை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதை தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் அழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விஜயபாஸ்கரின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்றது.

கல்குவாரி முறைகேடு
கல்குவாரி முறைகேடு குறித்து விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை மேற்கொண்டனர்.

பலமணி நேர விசாரணை
அவரிடம் பல்வேறு கேள்விகளை வருமான வரித்துறையினர் பல மணிநேரம் கேட்டதாக கூறப்படுகிறது. சின்னதம்பியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை முழுமையாக நிறைவடைந்தவுடன், இதுதொடர்பான மேல் விசாரணை அமலாக்கத்துறையினர் வசம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜயபாஸ்கருக்கு சம்மன்
இந்தநிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரை மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் இன்று ஜூலை 21ஆம் தேதி நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பாவை தொடர்ந்து மகன்
ஏற்கெனவே குவாரியில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தையிடம், கடந்த 14ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. இதுகுறித்து இன்று அமைச்சரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
முதல்வரின் நண்பர் தியாகராஜன் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications