சென்னை விமான நிலையத்தில் 65-வது முறையாக கண்ணாடி டமால்... பெண் போலீஸ் காயம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 65-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டதில் பெண் போலீஸ் ஒருவர் காயமடைந்தார்.
நாட்டில் பரபரப்பாக இயங்கும் விமானநிலையத்தில் ஒன்று சென்னை விமான நிலையம். ஆனால், சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கதவு, மேற்கூரை, தடுப்பு கண்ணாடி ஆகியவை அடிக்கடி உடைந்து விழும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் விமானப் பயணிகள் எந்த நேரத்தில் என்ன நிகழுமோ என்ற அச்சத்திலேயே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 64-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது. அந்தப் பட்டியலில் இந்த சம்பவத்தையும் சேர்ந்தால் ஆக மொத்தம் 65-வது விபத்து இது.
புறப்பட தயாராக இருந்த விமானம்
நேற்றிரவு சுமார் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்ல ஒரு விமானம் ஒன்று தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்லும் பயணிகளை பன்னாட்டு விமான நிலையத்துக்குள் 17-வது வாசல் வழியாக போலீசார் அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
உடைந்து விழுந்தது
மத்திய தொழில் படையை சேர்ந்த பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென 17-வது நுழைவு வாசலில் இருந்த 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட தானியங்கி கண்ணாடி கதவு திடீர் என பயங்கரமாக உடைந்து விழுந்தது.
பெண் போலீஸ் காயம்
தானியங்கி கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து காயமடைந்த பெண் போலீசை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது 65-வது முறை
உடைந்து விழுந்திருந்த கண்ணாடிகளை, விமான நிலைய ஊழியர்கள் வழக்கம்போல அகற்றிவிட்டு, புதிய தானியங்கி கதவை அங்கு பொருத்தினர். சென்னை விமான நிலையத்தில் இது போன்ற சம்பவம் நிகழ்வது இது 65-வது முறையாகும்.
எவ்வாறு உடைந்தது
தானியங்கி கண்ணாடி எவ்வாறு உடைந்தது என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையத்தில் உள்ள எல்லா கண்ணாடிகளையும் பரிசோதித்து வருகிறார்களாம். அடுத்து இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதே விமான பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆசியாவிலேயே மட்டமாக ஏர்போர்ட்
பல்வேறு டிராவல் வெப்சைட் சென்னை விமான நிலையம் மோசமாக உள்ளது என தெரிவித்துள்ளதாம். ஹெல்லோடிராவல்(hellotravel) என்னும் வெப்சைட் இந்த ஆண்டு சுமார் 26,000 விமான பயணிகளிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் சென்னை விமான நிலையம் மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் உள்ளதாம்.
2013-2014-ல் இதே நிலை தான்
2013 மற்றும் 2014-ம் ஆண்டும் சென்னை விமான நிலையம் மோசமான விமான நிலையத்தின் பட்டியலில் தான் இருந்ததாம். ஆனால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், பெங்களூர் கெம்பி கவுடா சர்வதேச விமான நிலையம், ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம், மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதே விமான நிலையம் ஆகியவை ஆசியாவில் உள்ள சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.