சென்னையில் சசிகலா உறவினர்களின் வீடுகள், நிறுவனங்களில் 2-ஆவது முறையாக ஐடி ரெய்டு
சென்னையில் சசிகலா உறவினர்களின் வீடுகள், நிறுவனங்களில் 2-ஆவது முறையாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னையில் தாம்பரத்தில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை உள்பட சசிகலா உறவினர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங்களில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் மெகா ரெய்டை நடத்தினர். ஒரே இடத்தில் கால் டாக்ஸிகளை புக் செய்துக் கொண்டு திருமண கோஷ்டி போல் அந்த கார்களில் மணமகன்- மணமகள் பெயர் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சுமார் ஒரு வார காலத்துக்கு நடைபெற்ற இந்த சோதனை தினகரனின் புதுவை பண்ணை வீடு, சசிகலாவின் மகன் விவேக் ஜெயராமன், மகள் கிருஷ்ணப்பிரியா, விவேக்கின் மாமனார் பாஸ்கரன், திவாகரனுக்கு சொந்தமான கல்லூரிஸ மன்னார்குடி வீடு என நடைபெற்றது.
நகைகள் பறிமுதல்
இதில் கணக்கில் வராத ரூ.1,700 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அங்கிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள்,நகைகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
சிறிய வேன் முழுக்க ஆவணங்கள்
இதை தொடர்ந்து போயஸ் கார்டனில் சசிகலா தங்கியிருந்த 4 அறைகளிலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தங்கியிருந்த ஒரு அறையிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி அங்கிருந்து ஒரு சிறிய வேன் அளவுக்கான பொருட்களையும், பென் டிரைவ், லேப்டாப்புகளையும் கொண்டு சென்றனர்.
வங்கிக் கணக்குகள்
இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சோதனை செய்த போது அவை பினாமி பெயர்களில் இருப்பதாகவும் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
நிறுவனங்களில் சோதனை
அதன் அடிப்படையில் இன்று சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தாம்பரம் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, ஸ்ரீ சாய் நிறுவனம், ஸ்ரீ சாய் கார்டன், இளவரசியின் மருமகனுக்கு சொந்தமான சென்னை அடையாறில் உள்ள கார்த்திகேயனின் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை 2-ஆவது முறையாக நடத்தப்படுகிறது.
தலா 10 அதிகாரிகள்
ஒவ்வொரு இடத்திலும் சுமார் 10 அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனை சென்னை மட்டுமல்லாது கோயம்புத்தூர்- பொள்ளாச்சி சாலை மயிலேறிபாளையம் பிரிவில் உள்ள தனியார் கல்லூரியிலும், கோவை தனியார் கல்லூரியின் தாளாளரான தஞ்சாவூரை சேர்ந்த ராகவேந்திரனின் வீட்டிலும் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த சோதனை நாளையும் நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இன்னும் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.