போலி கணக்கு மூலம் ரூ.150 கோடி டெபாசிட்- சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் 3 வது நாளாக சோதனை
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சேலம்: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நவம்பர் 8ம் தேதிக்கு பின்னர் போலி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. முறைக்கேடு தொடர்பாக கூட்டுறவு வங்கி அதிகாரி இளங்கோவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் இயங்கி வருகிறது. இதன் தலைவராக அதிமுக பிரமுகர் இளங்கோவன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர் சுரேஷ் தலைமையிலான சேலம், திருச்சியைச் சேர்ந்த வருமான வரித்துறையின் 18 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் சேலத்தில் 216 மற்றும் நாமக்கல்லில் 166 என மொத்தம் 382 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன.
பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான பின்னர் நவம்பர் 10ம் தேதியன்று அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் அவற்றின் இருப்பு தொகையை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு வங்கி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் 41 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ஒரே நாளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டிருந்ததை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் போலியாக ஏராளமான கணக்குகள் தொடங்கியது வருமான வரி சோதனையில் அம்பலமானது.
இந்த கணக்குகள் மூலம் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம் என வருமானவரித் துறை சந்தேகிக்கிறது. இதுதொடர்பாக ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்திருக்கும் வருமான வரித் துறை அதிகாரிகள், முக்கிய நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய கூட்டுறவு வங்கிக்கு கீழ் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும் 64 வங்கிகளைச் சேர்ந்த மேலாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தினர். முடிவில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
முக்கிய பிரமுகர்களின் கணக்குகளில் ரூ.150 கோடி மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே நாளில் ரூ.78 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதும் ஆய்வில் தெரியவந்ததால் வருமான வரித்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதில் மேட்டூர் அருகே வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஒரே நாளில் ரூ. 78 லட்சம் பழைய நோட்டுகள் டெபாசிட்டாக பெறப்பட்டு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டெபாசிட்டுக்கு கணினி பதிவு ஆவணமாக இல்லாமல் கையால் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் இல்லையாம்.
இதர தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 8ம்தேதிக்கு பின்னர் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ள நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பணம் டெபாசிட் செய்யப்பட்டு மாற்றியதில் முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.