அதிமுக ஆட்சியை வீழ்த்த திமுக தலைமையில் ஜனநாயக சக்திகள் இணைய வேண்டும்: முஸ்லிம் லீக் தீர்மானம்
சென்னை: திமுக கூட்டணிக்கு ஜனநாயக சக்திகள் வரவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், அந்தக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில துணைத் தலைவர்கள் அதிரை நஸ்ருதீன், எஸ்.எம். கனி சிஷ்தி, எஸ்.எம். கோதர் மைதீன், சேலம் காதர் ஹுசைன், மதுரை டாக்டர் மொய்தீன், மாநிலச் செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், ஆம்பூர் எச். அப்துல் பாஸித், வழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன் மற்றும் மாவட்டப் பொருளாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 186 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திமுக தலைமையிலான மாநில அரசு ஜனநாயக விரோத, மக்கள் விரோத அரசாக தொடர்வதை நாடறியும். ஐந்தாண்டு ஆட்சிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் தமிழக சட்டப் பேரவை வெறும் 190 நாட்கள் மட்டுமே கூட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மையே அதற்கு சான்றாகும்.
இந்த ஜனநாயக விரோத அதிமுக ஆட்சியை அகற்றி ஒரு நல்லாட்சியை அமைத்திட எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும். எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான தேர்தல் கூட்ட ணியில் அணி திரளுமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் இச்செயற்குழு அழைப்பு விடுக்கிறது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 75ஆக உயர்த்தப்பட்டிருப்பதை மகிழ்வுடன் வரவேற்கும் அதே வேளையில், இன்று அதில் ஒருவர் கூட முஸ்லிம் சமூகம் சார்ந்தவராக இல்லை என்ற உண்மையையும் உணர்ந்திருக்கிறோம்.
40 நீதிபதிகள் இருந்த சமயத்திலே கூட 4 நீதிபதிகள் முஸ்லிம் சமூகம் சார்ந்தவராக இருந்த நிலையில் இன்று நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆக உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் குறைந்த பட்சம் 5 நீதிபதிகள் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவராக நியமனம் செய்யப்பட வேண்டுமென இச்செயற்குழு மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் கேட்டுக் கொள்கிறது.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற நாளிலிருந்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் கூர்மைப்படுத்தியுள்ளது. முஸ்லிம்களின் அடையாளங்களையும், தனித்தன்மைகளையும் அழிப்பதில் பெரு முயற்சி எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வரலாற்று சிறப்பு மிக்க ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்' பெயரிலிருந்து ‘முஸ்லிம்' என்ற வார்த்தையை நீக்கவும், அதற்கு வழங்கப்பட்டுள்ள சிறுபான்மை நிறுவனம் என்ற அந்தஸ்தை நீக்கவுமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இந்த மதவாத நடவடிக்கைக்கு எதிராக ஒரு நாடு தழுவிய போராட்டத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைமை திட்டமிட்டு வருகிறது. அதன் தொடர்பாக டெல்லியில் வருகிற ஜனவரி 28ம் தேதி கூட இருக்கிற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய ஆலோசனைக் கூட்டம் வெற்றிய டைய இச்செயற்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.