ஜல்லிக்கட்டு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்- இதுவரை மொத்தம் 80 கேவியட்!
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என இதுவரை 80 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்காக போராடினர்.
இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் வகையில் சட்டம் ஒன்றை இயற்றியது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டுக்கான சட்டமசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. விலங்குகள் நல வாரியமும் தமிழகத்தின் சட்டத்தை ரத்து செய்யும்படி வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளது.
பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகிய தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள் வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. சட்டசபையில் நிறைவேறிய ஜல்லிக்கட்டு சட்டம் தொடர்பாக தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டத்துக்கு எதிரான மனுக்களை தங்களை கேட்காமல் விசாரிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு சட்டம் தொடர்பாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 80 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.