காளை காளை முரட்டுக்காளை.. சென்னையில் பிரீமியர் லீக்.. ஜல்லிக்கட்டு ஜூரம் ஸ்டார்ட்ஸ்!
சென்னையில் ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. மாட்டு பொங்கல் அன்று, 'ஜீ' தமிழ் தொலைக்காட்சியில் இந்த போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளது.
சென்னை: தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டன.
தமிழக மக்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டு தோறும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்றன. மதுரையில் அலங்காநல்லூர்,பாலமேடு, அவனியாபுரம் ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றன. இதனைக்காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும், சென்னை ஜல்லிக்கட்டு அமைப்பு இணைந்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உள்ளன.

கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர், டாக்டர் பி.ராஜசேகர் முன்னிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், ஜனவரியில் நடக்க உள்ள இந்நிகழ்வை, 'நாய்ஸ் அண்டு கிரெய்ன்ஸ்' நிறுவனம் ஒருங்கிணைப்பு செய்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட காளைகளும், நுாற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதை ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் வகையில் தேவையான வசதிகளுடன் அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

ஜனவரி 7ல் ஜல்லிக்கட்டு
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் சென்னை ஜல்லிக்கட்டு அமைப்பினர் சென்னையில், ஜல்லிகட்டு போட்டிக்கான லோகோவை சமீபத்தில் வெளியிட்டனர்.அப்போது பேசிய அவர்கள், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலை வங்கி எதிரே உள்ள மைதானத்தில், வரும் ஜனவரி 7ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மாட்டுப்பொங்கல் நாளில் ஒளிபரப்பு
தொடர்ந்து பேசிய அவர்கள், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டி, இந்தியன் பிரீமியர் லீக் போட்டி போன்று நடத்த திட்டமிடபட்டுள்ளதாகவும், இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து 500 இளைஞர்களும் அதற்கு ஏற்ற எண்ணிக்கையில் காளைகளும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

5 சுற்றுகளாக போட்டிகள்
பங்கு பெறும் காளைகள், ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு, ஐந்து சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர். இந்நிகழ்ச்சி நடைபெற்று சில நாட்களில், மாட்டு பொங்கல் அன்று, 'ஜீ' தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

வாடிவாசலை திறக்க போராட்டம்
இந்தாண்டு ஜனவரி மாதம் மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் மற்றும் மக்களின் இடைவிடாத போராட்டத்தால் தமிழக சட்டசபையில் இதுதொடர்பாகச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்கள் வீடு வாசலை விட்டு போராடியதால் வாடிவாசல் திறக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு மீதான ஆர்வத்தை உணர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும், சென்னை ஜல்லிக்கட்டு அமைப்பு இணைந்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உள்ளன.

உற்சாகமாக தயாராகும் காளைகள்
10 ஆண்டுகளுக்கு பிறகு எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளதால் மதுரை மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு எந்த வித சர்ச்சையும் இல்லாமல் நடக்கவிருப்பதால் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் ஆகியோர் பொங்கல் பண்டிகையை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications