விஷ வாயு தாக்கி இறந்த 7 பேர் குடும்பத்துக்கு ஜெ. இரங்கல்.. என்எல்சி பலிக்கு இரங்கல் இல்லையே
அதேசமயம், என்எல்சி நிறுவனத்தில் வட இந்திய பாதுகாப்புப் படை வீரர் சுட்டதில் பலியான தொழிலாளர் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்துறை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சிப்காட் தொழில் மையத்தில் இயங்கி வரும் தனியார் சாயத் தொழிற்சாலை சுத்திகரிப்பு மையத்திலுள்ள கழிவு நீர் தொட்டியில் 18.3.2014 அன்று மின்மோட்டார் பழுதினை நீக்க இறங்கிய போது, விஷவாயு தாக்கி, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த ஆனந்த், நேபாளத்தைச் சேர்ந்த பீர்பகதூர், ஷிபா, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சசிகுமார், ஈரோடு நகரைச் சேர்ந்த முருகன்; சென்னிமலையைச் சேர்ந்த மதன்குமார், சுதாகர் ஆகிய ஏழு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த ஏழு நபர்களின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் ஒன்பது நபர்கள் பாதிக்கப்பட்டு, மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம், என்எல்சியில் தொழிலாளர் ஒருவர் வட இந்திய பாதுகாப்புப் படை வீரர் சுட்டு பலியான சம்பவம் தொடர்பாக முதல்வர் இரங்கல் ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.