'அம்மா'வுக்கு ஜாமீன் மறுப்பு: நாமக்கல் உள்பட பல பகுதிகளில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
திருச்சி: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து 2 இடங்களில் கர்நாடகா பதிவு எண் கொண்ட பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.
இதனால் இன்று ஜெயலலிதாவுக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த அதிமுகவினர் கவலை அடைந்தனர். மேலும் ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்த துவங்கினர்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் வழியாக மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் கர்நாடக பதிவு எண் கொண்ட கே.பி.என். டிராவல்ஸ் பேருந்து மீது பைக்குகளில் வந்த மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் முன் கண்ணாடி முழுவதுமாக உடைந்து நொறுங்கியது. இது குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இது தவிர பழனியில் சென்று கொண்டிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட பேருந்து மீது கல்வீசித் தாக்கப்பட்டது. மேலும் நாமக்கல், திருச்செங்கோடு உள்பட பல பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.