அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு- அமைச்சர் கே.பி. முனுசாமி போய் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!
மொத்தமாக நாற்பதையும் அள்ள முடியாத ஆதங்கத்தில் 3 அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களைக் காலி செய்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது ஜெயலலிதாவின் பிரசாரங்களை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வழி நடத்திய நால்வர் அணியில் முக்கியமானவராக இருந்து வந்த அமைச்சர் கே.பி. முனுசாமியின் இலாகாவையும் மாற்றி விட்டார். கூடவே அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிருந்தும் அவரைத் தூக்கி விட்டார். புதிய உறுப்பினராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
நால்வர் அணி என்று அதிமுகவினரால் அழைக்கப்பட்ட அணியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் ஓ.பன்னீர் செல்வம், விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோர் சார்ந்த தொகுதிகளில் அதிமுக நல்ல வெற்றியைப் பெற்று விட்டது. ஆனால் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கே.பி.முனுசாமியின் பக்கத்துத் தொகுதியான தர்மபுரியில் பாமக வென்று விட்டது. அதிமுக தோல்வி அடைந்து விட்டது.
தர்மபுரி தொகுதி தோல்விக்கு முனுசாமி தான் பொறுப்பு என்பதால், அவரை பதவியிறக்கம் செய்துள்ளனர். பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது, கட்சி தலைமையின் உத்தரவு. ஆனால், அந்த தொகுதியை கவனிக்காமல், தான் சார்ந்த கிருஷ்ணகிரி தொகுதியில் மட்டுமே அவர் கவனம் செலுத்தியதன் விளைவாக, தர்மபுரியில் அதிமுக தோற்றது என, கூறப்படுகிறது.
மேலும், வன்னியர் அல்லாத உயர் கல்வித்துறை அமைச்சரான பழனியப்பன் பொறுப்பில், தர்மபுரி தொகுதியை ஒப்படைத்ததும், பணப் பட்டுவாடாவை முறையாக செய்யவில்லை என்பதும் முனுசாமி மீது கூறப்படும் குற்றச்சாட்டு.
இதுதான் அவரது பதவிக்கு தற்போது பிரச்சினையாகி விட்டது. பக்கத்துத் தொகுதியிலேயே முனுசாமி கோட்டை விட்டதால் கோபமடைந்த முதல்வர் ஜெயலலிதா அவர் வகித்து வந்த சக்தி வாய்ந்த உள்ளாட்சி மற்றும் சட்டத்துறையைப் பறித்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக்கி விட்டார். மேலும் தற்போது ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிலிருந்தும் நீக்கி விட்டார்.
நல்லவேளையாக கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வென்று விட்டது. இல்லாவிட்டால் முனுசாமியின் அமைச்சர் பதவியும் பறி போயிருக்கும். அந்த வகையில் பாதி தப்பி விட்டார் முனுசாமி என்கிறார்கள்.