ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டத்தை வாக்கு வங்கியாக மாற்றிய அமைச்சர்கள்?
அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் என்றால் அக்கட்சி தொண்டர்கள் அன்றைய தினத்தையும், அதற்கு முன்பும், பின்பும் வரும் சில தினங்களையும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்.
தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி, அக் கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் தென் மண்டல செயலாளர் மு.க. அழகிரி ஆகியோரின் பிறந்தநாள் அன்று தமிழகத்தில் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதை விட அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிறந்தநாளை அக்கட்சி தொண்டர்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை போல் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தான் பிரமதர் வேட்பாளராக களத்தில் உள்ளதாக ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார். இதையே அதிமுகவினரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் வழக்கம் போல் நீர் மோர் பந்தல் திறப்பு, கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்குதல், பொதுக் கூட்டம், மாநாடு போன்றவை இல்லாமல், முதல்வர் கனவனத்தை பெற வேண்டும் என்பதற்காக அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் விதவிதமாக நலத்திட்ட உதவிகளை வழங்கி அசத்திவிட்டனர். மேலும், அந்த நலத்திட்ட உதவிகளையே வாக்கு வங்கிகளாக்கிவிட்டனர் என்றும் கூறப்படுகின்றது.
தமிழக அமைச்சரும், ஜெயலலிதா பேரவை செயலாளருமான உதயகுமார் கடந்த 20ம் தேதி அன்று கல்லூரி மாணவர்களுக்கு என பிரமாண்டமான ஆளுமை முகாமை சென்னையில் நடத்தினார்.
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் 6,600 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் வழக்கறிஞர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆக்கப்பூர்மான தகவல்களை வழங்கியுள்ளனர்.
அதே போல ரத்த தானம் வழங்குவதை விழிப்புணர்வாக செய்யும் விதமாக போக்குவரத்துத் துறையில் உள்ள தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர், கல்லூரி மாணவ, மாணவிகள் என மொத்தம் சுமார் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கி கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.
இது போக, ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேர்வுக்கு தயாராகும் வகையில் அவர்களுக்கு கேள்வி -பதில் பாணியில் பயிற்சி ஏடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் மதுரையில் அகில இந்திய அளவில் கபடி போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். இது போல் பலரும் பலவித நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.
இந்த நலத்திட்ட உதவிகள் எல்லாம் பொது மக்களை நேரடியாக சென்று அடைந்துள்ளதால், அவைகள் வாக்கு வங்கிகளாக மாறும் என அதிமுக முன்னணி நிர்வாகிகள் நம்புகின்றனர்.