சந்திக்க அனுமதிக்கமாட்டார்களாம்.. ஜெ. மருத்துவ பில்லை மட்டும் குடும்பத்தாருக்கு அனுப்பிய அப்பல்லோ!
அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைக்கான, மருத்துவ பில் மட்டும் குடும்பத்தாருக்கு அனுப்பப்பட்டதாக டாக்டர்கள் கூறியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், இன்று அப்பல்லோ மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் பிரஸ் மீட் செய்தனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், டாக்டர் பாலாஜி, டாக்டர் பாபு உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை செலவு சுமார் ரூ.5.4 கோடிவரை ஆகியிருக்கும் என்றும், அந்த பில் ஜெயலலிதாவின் குடும்பதாரிடம் கொடுக்கப்பட்டது என்றும் டாக்டர் பாலாஜி தெரிவித்தார்.
அதேநேரம், முன்னதாக நிருபர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு டாக்டர்கள் அளித்த பதிலில் இருந்து இது முரண்பட்டதாக இருந்தது. ஜெயலலிதாவின் குடும்பத்தார் யாரையுமே அவரை சந்திக்க அனுமதிக்கவில்லையே என்ற நிருபர்கள் கேள்விக்கு, இதற்கு பதில் சொல்ல முடியாது என்று முதலில் டாக்டர்கள் தெரிவித்தனர். பிறகு, ஒருமுறை, அதே டாக்டர்கள் இவ்வாறு பதிலளித்தனர். "ஜெயலலிதா தன்னை யார் சந்திக்க வேண்டும் என்று, அவரே முடிவு செய்தார். சந்திக்க வருவோரின் பெயரை பேப்பரில் எழுதி காட்டுவோம். அவர்தான் தன்னை சந்திக்க வருவோர் யார் என்பதை முடிவு செய்தார்" என்று தெரிவித்தார்.
உறவினர்கள் யாரையுமே ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்காத சூழல் இருந்ததாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டினார். அவரையும் உள்ளேவிடவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் மருத்துவ பில் மட்டும் குடும்பத்தாருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணத்தை அரசு செலுத்தியதா அல்லது, குடும்பத்தார் என்றால் யார் என்ற நிருபர்களின் கேள்விக்கு, அவர் யார் என்பது குறித்து மருத்துவமனை சி.இ.ஓவுக்குதான் தெரியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்.