ரமலான் நோன்புக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க எனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டிருந்தேன்.
அதன்படி, பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய பெருமக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரமலான் நோன்பு
சென்ற ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசியை வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வயதுள்ளன.

நோன்புக்கஞ்சி
இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க ஆணையிட்டுள்ளேன்.

மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவு
ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

4500 மெட்ரிக்டன் அரிசி
இதன்படி, 4500 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடையும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications