ஜெ.ராசி நம்பர்கள் மாறிப்போச்சு!… இனி எல்லாம் இப்படித்தான்!!
சென்னை: ராசி நம்பர், ராசி கலர் பார்த்துதான் முதல்வர் ஜெயலலிதா எந்த செயலையும் செய்வார். இதில் அதீத நம்பிக்கைக் கொண்டவர் ஜெயலலிதா என்பது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. பச்சைக்கலர் புடவை கட்டுவது முதல் பச்சைக்கலர் பேனாவில் கையெழுத்து போடுவதை வரை கலர் சென்டிமென்ட் பார்ப்பார் ஜெயலலிதா.
அதேபோல தனக்கு ராசியான எண் என்ன என்பதில் தெளிவாக இருப்பார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு முந்தைய ஆண்டுகளில் ராசி எண் 9 என்று கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதா பல்வேறு முக்கிய முடிவுகளை 9ஆம் தேதி தான் எடுப்பார். மேலும் அவரது செயல்பாடுகள் அனைத்தும் கூட்டுத் தொகை 9 வருமாறு அமைத்துக் கொண்டார். ஆனால் கடந்த ஆண்டுகளில் அவர் 9க்கு விடுதலை கொடுத்துவிட்டு 7ஆம் எண்ணுக்கு மாறியதாக கூறப்பட்டது.
4 வதுமுறையாக முதல்வர்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக 16-5-2011 பொறுப்பேற்றார். பதவியேற்ற நாள் 16. இதன் கூட்டுத்தொகை 7. இதனையடுத்து தற்போது ஜெயலலிதாவின் ராசி எண்கள் மாறிவிட்டதாக தெரிகிறது.
11ஆம் நம்பர் ராசி
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுதலை செய்த தேதி மே 11. மீண்டும் அரியணையில் அமரவைத்ததோடு அரசியல் மறுவாழ்வுக்கு நிச்சயம் போட்ட நாள் என்பதால் மே 11 ஜெயலலிதாவின் ராசி நம்பர் ஆகிவிட்டது.
11 இனி தவிர்க்க முடியாது
ஜெயலலிதா 217 நாட்களுக்குப் பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த நேரம் 1.28. இதன் கூட்டுத் தொகையும் 11. மே 23ஆம் 5வது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. பதவியேற்பு நடந்த நேரம் 11 மணி. அமைச்சரவை எண்ணிக்கை 29. இதன் கூட்டுத் தொகை 11. பதவியேற்பு விழாவுக்காக கார்டனில் இருந்து புறப்பட்ட நேரம் 10.37. அதன் கூட்டுத் தொகையும் 11. ஆக, இனி எல்லாமே 11 என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார்.
ராசி எண்கள்
ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் மிகுந்த நம்பிக்கைக் கொண்ட ஜெயலலிதா, பதவியேற்பு நாளிலும், கோட்டைக் போய் பைல்களில் கையெழுத்து போட்ட நாட்களிலும் நடந்துள்ள அனைத்து நிகழ்வுகளிலும் எண்கள் ஐந்தோ அல்லது 11 ஆம் எண் வருகிறபடியே அரங்கேற்றியது.
5 பைல்களில் கையெழுத்து
பதவியேற்றதும் கோட்டைக்கு ஜெயலலிதா செல்வதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், காலையில்தான் அது ரத்து செய்யப்பட, நேராக போயஸ் தோட்ட வீட்டிற்குச் சென்றார். மறுநாள் ஞாயிறன்று கோட்டைக்கு வந்த முதல்வர் உள்ளாட்சித் துறை மற்றும் சில துறைகள் சார்ந்த 5 திட்டங்களுக்கான ஃபைல்களில் கையெழுத்திட்டு பணியைத் துவக்கினார்.
ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி
இதேபோல ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா நிற்பதற்காக அந்த தொகுதியின் எம்.எல்.ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்திருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியின் வரிசை எண் 11.
இனிமே எல்லாம் இப்படித்தான்
ஜெயலலிதாவின் ராசி எண்கள் மாறியுள்ளதால் இனி துவக்கப்படும் திட்டங்கள், ஜெயலலிதா பங்கேற்கும் விழாக்கள், என எல்லமே 11 மற்றும் 5 வருமாறு பார்த்துக் கொள்வார்கள் அதிமுகவினர். இனிமே எல்லாம் இப்படித்தான் ஆங்ங் என்கின்றனர் அதிமுகவினர்.