அதிமுக அரசுக்கு 'தண்ணிலதான்' கண்டம்: பாமக பாலு கணிப்பு
சென்னை: மழை பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குடிசையில் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருக்க வேண்டும் என்று பாமக நிர்வாகி, வழக்கறிஞர், பாலு கோரிக்கைவிடுத்துள்ளார்.
சென்னையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஜெயலலிதா பார்வையிட்டார். வேனில் இருந்தபடியே ஆர்.கே.நகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அவர் பார்வையிட்டு திரும்பினார்.
இதுகுறித்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், பாலு கூறியதாவது: வேனில் இருந்தபடியே சில நிமிடங்கள் பார்வையிட்டு திரும்பியதால் மக்கள் துயரத்தை முதல்வர் அறிய முடியாது.
மக்கள் படும் துயரம் ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. எனவே, மழை பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள குடிசைகளில் ஏதாவது ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா ஒருநாள் தங்க வேண்டும். அப்போதுதான் நிலைமையை சரியாக புரிந்துகொள்ள முடியும்.
ஆர்.கே.நகரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஸ்பீக்கரில் ஜெயலலிதா பேசியபோது, வாக்காளர பெருமக்களே.. என்று பேச்சை ஆரம்பித்தார். பேச்சை முடிக்கும்போது, அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க என்று முடித்தார். இது தேர்தல் பிரச்சாரமா, மக்களின் துயரை பார்வையிட சென்ற பயணமா?
ஜெயலலிதா அரசுக்கு தண்ணீரில்தான் கண்டம். மழை மற்றும் டாஸ்மாக் மதுபானம் ஆகிய இரு தண்ணீரும், ஆட்சிக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி, ஆட்சிக்கு எதிராக வெடிக்கும். இவ்வாறு பாலு தெரிவித்தார்.