கஜானாவை நிரப்பும் மதுக்கடைகளை மூட ஜெ.வுக்கு எப்படி மனசு வரும்?- திருச்சியில் ஸ்டாலின் தாக்கு
திருச்சி: தமிழகத்தில் கோடி, கோடியாய் சொந்த வருமானத்தை ஈட்டித் தருகின்ற மதுக்கடைகளை மூட ஜெயலலிதாவிற்கு எப்படி மனது வரும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நமக்கு நாமே மக்கள் நலப்பணியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் துவக்கவுரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், ''தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் அலோங்கோலங்கள், அக்கிரமங்கள், கொடுமைகள், அநீதிகள், கொலைகள், பாலியல் பலாத்காரம், லஞ்சம் லாவண்யம் மிகுந்த ஒரு கொடுமையான ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு தமிழ்நாட்டிலிருக்கும் எல்லாத் தரப்பு மக்களுமே இன்றைக்கு தயாராக இருக்கிறார்கள்.
பொய்யான வாக்குறுதிகள்:
கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கலைஞர் வெளியிட்ட அறிக்கையைப் பற்றி சொல்லும்போது, இந்த தேர்தலில் இது தான் "ஹீரோ", திமுகவின் தேர்தல் அறிக்கைதான் "கதாநாயகன்" என்று சொல்லக்கூடிய அளவிற்கு தேர்தல் அறிக்கை வெளிவந்தது. ஆனால் ஜெயலலிதாவின் பொய்யான வாக்குறுதிகளால் அதிமுக ஆட்சிக்கு வந்து, 5 வருடம் ஆட்சி நடைபெற்று, இப்போது முடியும் கட்டம் வந்துள்ளது.
காற்றில் பறந்த உறுதி மொழிகள்:
இந்த அதிமுக ஆட்சியில், தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டிருக்கிறதா ? நிறைவேற்றப்பட்டு உள்ளதா ? அல்லது அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியிலாவது இந்த ஆட்சி ஈடுபட்டதா ? என்றால் இல்லை. இன்று உங்களையெல்லாம் மகிழ்ச்சியாக, பெருமையாக சந்திக்க வந்திருக்கிறோம் என்று சொல்ல முடியவில்லை. வருத்தத்தோடு, வேதனையோடு நாம் ஒவ்வொருவரும் சந்திக்கக் கூடிய நிலையில் வந்திருக்கிறோம். ஆக உங்கள் குடும்பத்தின் நிம்மதியை தொலைத்துவிட்டு, ஒரு எதிர்ப்பார்ப்போடு வந்திருக்கிறீர்கள்.
விளையாட்டான மக்கள் நலப்பணி:
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ன சொன்னார்கள் என்பதை நான் நினைவுப்படுத்துகிறேன். அது உங்களுக்கு தெரிந்தது தான். "20 ஆண்டுகளாக பணியாற்றியவர்களை கேள்வி கேட்காமல் நீக்கியிருக்கிறீர்கள். மக்கள் நலப்பணியாளர்களின் நிலை ஒரு கால்பந்து விளையாட்டுப் போல் இருக்கிறது", என்று தன்னுடைய கண்டனத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் அவர்கள் வேதனையோடு சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
என்ன நடக்கின்றது தமிழகத்தில்:
நீதிபதி சுகுணா அவர்கள் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி இக்பால் அறிவிக்கிறார். அதற்குப் பிறகாவது இந்த ஆட்சி உங்களுக்கு வேலை கொடுத்ததா என்றால் இல்லை. உடனே அந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மறுபடியும் அப்பீலுக்குப் போனார். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி டி.கே.ஜெயின் அமர்வு முன்பு வந்தபோது, அங்கு என்ன தீர்ப்பு சொன்னார்களென்றால், "தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? ஆட்சி மாறுகின்ற போதெல்லாம், அதற்கு முன்பிருந்த ஆட்சி செய்த திட்டங்களை ரத்து செய்வதா ? இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாட்டில் நடக்கவே கூடாது", என்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளே கண்டித்து, விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.
பொறுப்பில்லாத ஆட்சியாளர்:
பிறகு தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில் ருத்ரா மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் "பொறுப்பில்லாத ஒருவர் ஒப்பந்தம் செய்துவிட்டு 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்க்கையை இந்த அரசு பாழடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திறகே நான் அனுப்பி வைக்கிறேன், ஆறு மாதத்தில் இந்த வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும்", என்று தீர்ப்புக் கொடுத்தார்கள்.
மீண்டும் வேலை தர வேண்டும்:
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால் வசந்தகுமார் மற்றும் சத்தியநாராயணா ஆகியோர் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து விட்டு, "மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும்", என்று தீர்ப்பும் தந்தார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் ஒரு யோசனையும் சொன்னார்கள். அது என்னவென்றால், "மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலையில்லை என்று நீங்கள் சொல்ல முடியாது, மதுவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கும் கூட அவர்களை நீங்கள் பயன்படுத்தலாம்", என்று அதிமுக அரசிற்கு ஆலோசனையும் சொன்னார்கள்.
மதுவுக்கு எதிர்ப்பே வராது:
மதுவுக்கு எதிராக எப்படி பிரச்சாரம் செய்ய ஜெயலலிதாவுக்கு மனது வரும் ? ஏனென்றால் அந்த மதுவால் தான் தன்னுடைய தொழிலை, தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு வசூல் செய்யக் கூடிய, கோடி கோடியாக கொள்ளையடிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது. அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய முன் வரமாட்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே இந்த நிலையில்தான் 19-08-2014 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டு, இதுவரை இந்த ஆட்சி அந்த தீர்ப்பை அமுல்படுத்தவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.
திமுக ஆட்சி மலரும்:
விரைவில் அதிமுக ஆட்சியிலிருந்து இறங்கப் போகிறது. திமுக ஆட்சி மலரப்போகிறது. கலைஞர் முதல்வராக வரப்போகிறார். கழக ஆட்சி அமைந்தவுடன், முதல் கையெழுத்து மதுவிலக்குக்காக போடுகிறபோது, இரண்டாவது கையெழுத்து எங்களுக்காக போடுங்கள் மதிவாணன் இங்கு சொன்னார். நான் சொல்கிறேன் கழக ஆட்சி அமைந்தவுடன், தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் வழக்கு வாபஸ் பெறப்படும். கலைஞரின் அனுமதி பெற்றுத்தான் இங்கு வந்து பேசுகிறேன்.
70 நாட்களே உள்ளன:
ஐந்து வருடங்களே ஐந்து நிமிடத்தில் கடந்து சென்று விட்டது. எனவே மக்கள் நலப்பணியாளர்கள் கவலைப்பட வேண்டாம், இன்னும் 70 நாட்களே மீதமுள்ளன. தேர்தலுக்குப் பிறகு அதிமுக அரசு அகற்றப்பட்டு தலைவர் கலைஞர் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் உங்களுடைய அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். குறிப்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மக்கள் நலப்பணியாளர்களின் நலன்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள மனுக்கள் திரும்பப் பெறப்படும்.
மக்களைத் தேடி வரவேண்டும்:
மக்களைத் தேடி அரசியல்வாதிகள் வரக் கூடிய சூழ்நிலை இன்று வந்திருக்கிறது. அரசியல்வாதிகளை தேடி மக்கள் போய் கொண்டிருந்த நிலை மாறி, இனிமேல் வரக்கூடிய காலத்தில் அரசியல்வாதியை தேடி மக்கள் போகக்கூடாது, மக்களைத் தேடி அரசியல்வாதிகள் வர வேண்டும், மக்களுடைய பிரதிநிதிகள் மக்களைத் தேடி வரவேண்டும். அதை இந்த பயணத்தின் மூலமாக நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். தேர்தலுக்காக இந்த நமக்கு நாமே பயணத்தை நடத்துகிறேன் என்று யாரும் கருதக்கூடாது. நான் மறுக்கவில்லை, தேர்தலுக்காக இல்லை என்று சொல்லி உங்களையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்ற விரும்பவில்லை. அது ஒரு பக்கம். ஆனால் தேர்தல் முடிந்ததற்கு பிறகும் இதே போன்ற ஒரு பயணத்தை நடத்தப் போகிறேன்.
பெருமை தேடித் தாருங்கள்:
அப்போது உங்களை எல்லாம் சந்திப்பேன். அப்படி சந்திக்கும்போது நீங்கள் மக்கள் நலப்பணியாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையோடு, அந்த உறுதியோடு தான் சந்திப்பேன். அது தான் நடக்கப் போகிறது என்ற உண்மையை எடுத்துச் சொல்லி, இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து எங்களையும் பெருமைப்படுத்தி, கழகத்திற்கும் பெருமையை தந்திருக்கக் கூடிய உங்களுக்கெல்லாம் இதயப்பூர்வமான நன்றியை மீண்டும் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்" என்று பேசினார்.