சைகை மூலம் பேசுகிறார் ஜெயலலிதா.. மீண்டும் சென்னை வருகிறார் லண்டன் டாக்டர் ரிச்சர்ட்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சைகை மொழியில் பேசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் நாளை மறு நாள் சென்னை வருவதாக அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 22ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு வகையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவரது உடல் நிலை குறித்து 10 அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறிக்கை எதையும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடவில்லை. இந்த நிலையில் முதல்வரின் உடல் நிலை வேகமாக தேறி வருவதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

ரிச்சர்ட் பியல் வருகிறார்..
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல்நாளை மறுநாள் மீண்டும் சென்னை வருகிறார். அவர் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, அதில் மாற்றம் தேவையா என்பது குறித்து அப்பல்லோ டாக்டர்களுடன் விவாதிக்கவுள்ளார். அதன் பேரில் சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும்.

சைகையில் பேசுகிறார்...
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா சைகை மொழியிலும், உடல் அசைவு மொழியிலும் பேச ஆரம்பித்துள்ளாராம். தானாக எழுந்து உட்காருகிறாராம். தானாக சாப்பிடுகிறாராம் என்று இந்துப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

சுவாச உதவிகள் தொடர்கின்றன..
அதேசமயம், முதல்வருக்கு தொடர்ந்து சுவாச உதவிகள் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அவருக்கு சுவாச உதவிக் குழாய்கள் நீக்கப்பட்டதும் அவரால் பேச முடியும் என்று நம்பப்படுகிறது.

நன்றாக இருக்கிறார்...
முதல்வர் மயக்க நிலையில் இல்லை, அவர் நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை நன்கு வேலை செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

நுரையீரலில் திரவம் சேரவில்லை..
முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சை காரணமாக அவரது நுரையீரலில் தேங்கிய திரவம் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. புதிதாக எதுவும் சேரவில்லை என்றும் இந்து செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications