தீபா பேரவையில் யாருக்கும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை - தீபா
தீபா பேரவையில் யாருக்கும் தனிப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அதிமுகவில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தீபா பேரவை தொடங்கபட்டு உறுப்பினர் சேர்க்கும் பணியும் நடந்து வருகிறது. அவ்வப்போது ஆலோசனை கூட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான கடந்த 17ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் பேட்டியளித்த தீபா, ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24ஆம் தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்திப்பேன் என்றும் அவர்களின் கருத்துக்களை கேட்பேன் என்றும் கூறியிருந்தார் தீபா. இதனிடையே சில மாவட்டங்களில் தீபா பேரவையில் சேர பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, தீபா வீட்டு முன்பு ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், பொறுப்புகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. இது சம்மந்தமாக யாரையும் அணுக வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரியும் பல மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வரும் அதிமுகவினர் தி. நகருக்கு வந்து தீபா வீட்டிற்கு முன்பு வந்து தலைமை ஏற்க வா என்று அழைத்து விட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications