குற்றவாளி ஜெ. படத்தை சட்டசபையில் வைக்கலாமா… வேண்டாமா… திருநாவுக்கரசர் புது ஐடியா
சட்டசபையில் ஜெயலலிதா படத்தை வைக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க புது ஐடியா ஒன்றை கூறியுள்ளார் திருநாவுக்கரசர்.
சென்னை: குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் மாற்றுவது குறித்து நீதிமன்ற உத்தரவை பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 53வது நினைவு நாளான இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் அணைக்கட்டுக்களையும், பல்வேறு தொழிற்சாலைகளையும் உருவாக்கியவர் நேரு. ஒப்பற்றத் தலைவரான அவரால் இந்தியா எழுச்சி பெற்றுள்ளது.
ஜெ. படம் முதல்வராக..
ஏற்கனவே முன்னாள் முதல்வர்களின் படங்களில் சட்டசபையில் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா 5 முறை முதல்வராக இருந்தவர். அந்த வகையில் அவரது படத்தை வைப்பதில் எந்த தவறும் இல்லை.
குற்றவாளி
அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய படத்தை சட்டசபை வளாகத்தில் வைக்கக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு பலமாகவே உள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
குற்றவாளி என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் படம் சட்டசபையில் வைக்கக் கூடாது. அதனால் இதுபற்றி சுப்ரீம் கோர்ட் அல்லது ஹைட்கோர்ட் வழிகாட்டுதலைப் பெற்று பின்னர் இதுகுறித்து முடிவெடுக்கலாம்.
மோடியின் பிடி
அதற்கு முன்னர் தமிழக அரசு மோடியின் பிடியில் இருந்து வெளியே வர வேண்டும். மோடியின் கையில் அதிமுகவின் கயிறு இருக்கிறது. அதனால் அமைச்சர் அச்சத்தில் உள்ளனர் என்று திருநாவுக்கரசர் கூறினார்.