ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும்- மோடிக்கு ஜெ. மீண்டும் கடிதம்
சென்னை: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில் அறிவிக்கை ஒன்றின் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது.
இந்தத் தடைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உடனே முறையிட வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மத்திய அரசு உடனே அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன். பாரம்பரிய நிகழ்வான ஜல்லிக்கட்டு மீதான தமிழக மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.