சத்தீஷ்கர் பயிற்சிக் கூட்டம்... அழைப்புக்கு ‘நன்றி’ சொல்லி, வரமுடியாதற்கு ‘ஸாரி’ சொன்ன ஜெ.!
சென்னை: சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள திறன் மேம்பாட்டு பயிற்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என பஞ்சாப் முதல்வருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நிதி அயோக்கின் திறன் மேம்பாட்டு துணைக்குழு முதலமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பஞ்சாப் முதல்வரும், இந்தக் குழுவின் தலைவருமான பிரகாஷ்சிங் பாதல் தலைமை வகித்தார்.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
ராய்ப்பூரில் நடைபெறும் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் எனக்கு பல பணிகள் இருப்பதால் என்னால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஏற்கனவே கடந்த 25-4-2015 அன்று நடந்த முதல் கூட்டத்தில் தமிழ்நாட்டின் கருத்துக்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.
திறன் மேம்பாடு என்பது நாட்டுக்கு மிக அவசியமானது ஒன்று. இந்த விஷயத்தில் தமிழ்நாடு பல்வேறு முன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கூட்டம் தொடர்பாக அனுப்பிய வரைவு அறிக்கையை நான் படித்தேன். அதில் தமிழ்நாடு ஏற்கனவே வழங்கியிருந்த பல்வேறு ஆலோசனைகள் சேர்க்கப்பட்டு இருந்தது. அதற்காக மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் பல கருத்துக்களையும் அதில் சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை இடம் பெற்றால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
திறன் வளர்ச்சி என்பது ஒரு மாநிலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரும் மக்களின் தேவைக்கு ஏற்றாற்போல அவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மக்களின் தேவைகள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்தர்ப்பங்கள் இவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அதற்கு தகுந்தாற் போல திறன் பயிற்சிகள் இருக்க வேண்டும்.
வாய்ப்புகளும், தேவைகளும் சீராக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அந்தந்த மாநிலத்திற்கு தகுந்தமாதிரி இருக்க வேண்டும்.
மக்கள் தொகைக்கு தகுந்தாற்போல உற்பத்தி நிலை உருவாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தேசிய அளவில் முக்கியத்துவம் அளித்து செய்ய வேண்டும்.
இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கொள்கைகளை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றை இலவசமாக ஏழை மக்களுக்கு வழங்கியது சுட்டி காட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டு அவர்களை மாற்றுப் பணிகளில் கவனம் செலுத்த செய்கிறது. தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சுயஉதவி குழுக்கள், புது வாழ்வு திட்டம் மற்றும் கிராமப்புற மக்களுக்கான உலக பாங்கி உதவி திட்டம் போன்றவை பற்றி சொல்லப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் மாற்று திறன் கொண்டவர்கள் மற்றும் அவர்களுடைய பிரச்சினைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. அவர்களுக்கும் அவர்களின் திறமைக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்குவது முக்கியமானதாகும். எனவே அதுவும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இளைஞர் திறன் மேம்பாட்டுக்கான திட்டங்கள் இடம்பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு தொழிற் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்குவதோடு அவர்களுக்கு மாதாமாதம் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. அதே போல சமுதாய கல்லூரிகள் நடத்தப்பட்டு அதன் மூலமும் பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
சமுதாய கல்லூரிகளில் மட்டும் 62 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.