உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் வாபஸ் பெற்றார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோபம் ராமானுஜர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோபம் ராமானுஜர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.
தமிழை ஆண்டாள் என்ற நிகழ்ச்சியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது ஆண்டாள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து பேசினார். அப்போது ஆண்டாள் குறித்து அமெரிக்க எழுத்தாளர் கூறிய கருத்தை வைரமுத்து மேற்கோள்காட்டினார்.
அவர் கூறிய வார்த்தை அந்த காலங்களில் கடவுள் சேவை செய்யும் வகையில் இருந்ததாகவும், தற்போது அந்த வார்த்தை தவறான அர்த்தம் கற்பிக்கும் படி இருப்பதால் வைரமுத்துவின் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்து அமைப்புகள் போராட்டம்
வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அவரது உருவபொம்மைக்கு தீவைத்து கொளுத்தினர். பின்னர் கண்டன கூட்டங்களை நடத்தினர். மேலும் வைரமுத்து தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
தாயை பழிப்பேனா
அவர் விளக்கம் கூறியும், வருத்தம் தெரிவித்தும் இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. மேலும் எனக்கு தமிழ்ப் பால் ஊட்டிய ஆண்டாளை நான் சிறுமைப்படுத்துவேனா என்றும் வைரமுத்து கேள்வி எழுப்பினார். எனினும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். வைரமுத்துவுக்கு கெடு விதித்து விட்டு உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில் ஜீயர் மறுபடியும் போராட்டத்தை தொடங்கி பிப்ரவரி 3-க்குள் வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
ஆலோசித்து முடிவு
ஆனால் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை வைரமுத்து கோயிலுக்கு வரவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக ஜீயர் அறிவித்தார். இந்த நிலையில் ஜீயர் நேற்றைய தினம் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். பக்தர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
வாபஸ் பெற கோரிக்கை
இந்நிலையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஜீயரை எஸ்.வி.சேகர், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் மன்னிப்பு கேட்காத வைரமுத்துவை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்கள் கோரிக்கை
உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு பக்தர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையேற்று ஜீயர் சடகோப ராமானுஜர் இன்று உண்ணாவிரதத்தை கைவிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.