தலைமறைவாகி கைது செய்யப்பட மாஜி நீதிபதி கர்ணன்... சர்ச்சைகளின் சங்கமம்!
சென்னை: உச்சநீதிமன்ற கைது நடவடிக்கையை தவிர்க்க தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டார்.
அவர் குறித்து விவரங்களும், அவர் சிக்கிய சர்ச்சைகளும்... இதோ.... அவரது பெயர் கர்ணன், உண்மையான பெயர் சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன் என்பதாகும்.
அவர் கடந்த 1955-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 62. பிறந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கர்ணாத்தம் கிராமம் ஆகும். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து தலைமறைவாகவே ஓய்வு பெற்றார்.

கர்ணன் சர்ச்சைகள்
2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை துன்புறுத்துவதாகவும், பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார்.

மோடிக்கு கடிதம்
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மற்றம் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 20 நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அவர்களின் பெயர்கள் அடங்கிய கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளம்பியது.

ஆஜராக உத்தரவு
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவதூறு வழக்கு பதிவு செய்தது. நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த கர்ணனுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி-க்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது. எனினும் அவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவும் இல்லை விளக்கம் அளிக்கவும் இல்லை.

மனநல பரிசோதனை
மே 1-ஆம் தேதி அவருக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொல்கத்தா அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கர்ணன் மறுப்பு தெரிவித்ததோடு தனது மனநிலை சரியாக உள்ளதாகவும், இந்த பரிசோதனை உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கே தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

5 ஆண்டுகள் சிறை
அத்துடன் நிற்கவில்லை நீதிபதி கர்ணன். மே 8-ஆம் தேதி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததோடு அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.

இன்று கர்ணன் கைது
கர்ணனின் தண்டனை விவரங்களால் ஆத்திரமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மே 9-ஆம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்ததனர். இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர் இன்று (ஜூன் 20-ஆம் தேதி) கோவையில் மலுமிச்சம்பட்டியில் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications