லஞ்சம் இல்லாமல் சார் ஆட்சியர் அலுவலகங்களில் எதுவும் நடக்காது? நீதிபதி கிருபாகரன் சுளீர் கேள்வி?
சென்னை ஆலந்துதூரைச் சேர்ந்த பூபதி என்பவர் ஓராண்டாகியும் பத்திரங்கள் பதிவு செய்யப்படாதது தொடர்பாக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது அவர் அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பத்திரப்பதிவுத்துறை என்பது ஊழலில் திளைக்கும் துறையாக உள்ளது. லஞ்சம் கொடுக்காமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் எதுவுமே நடக்காது என்ற சூழல் தான் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.
சோதனை நடத்தியதா?
லஞ்சத்தைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதுவரை எத்தனை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது.
லஞ்சம் வாங்க தரகர்கள்
3 வாரத்தில் பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் அல்லது திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் பம்மல் சார்பதிவாளர் ஓராண்டாகியும் மேல் ஆவணங்களை வைத்திருந்தது ஏன். பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சப்பணம் பெற்று கொடுப்பதற்காகவே தனியாக தரகர்கள் இருக்கிறார்கள் என்பது அரசுக்கு தெரியுமா?
எவ்வளவு பணம் பறிமுதல்?
பத்திரப்பதிவு அலுவலகங்களில் 10 ஆண்டில் எத்தனை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், எவ்வளவு லஞ்சப்பணம் பிடிபட்டுள்ளது என்ற விவரங்கள் உள்ளனவா என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பினார்.
பதிலளிக்க உத்தரவு
மேலும் இந்த வழக்கில் வணிகவரித்துறை செயலாளர், டிஜிபியை எதிர் மனு தாரராக நீதிபதி கிருபாகரன் சேர்த்துள்ளார். நீதிபதி எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.