இனப்படுக்கொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை: முழக்கமிட்ட வைகோ
சென்னை: இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இன படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் நடந்தது போர் குற்றம் அல்ல, இனபடுகொலை என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று ஈழ தமிழர்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
சர்வதேச வாக்கெடுப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 'இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்திடு!', 'ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்திடு!', 'ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம் அல்ல, இனப்படுகொலை', 'தமிழ் இனப்படுகொலை இன்றும் தொடர்கின்றது', 'ஈழம் ஒன்றே ஒரே தீர்வு!', 'இந்தியாவின் கைகளில் ஈழத்தமிழனின் ரத்தம்', 'சர்வதேசமே! உன் பாவத்தை இனப்படுகொலை விசாரணை, பொதுவாக்கெடுப்பு மூலம் கழுவிடு!', 'ஈழம் என்னும் நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்!' போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நீதி விசாரணை தேவை
கூட்டத்தில் வைகோ பேசும்போது, ''ஈழத் தமிழ் இனத்தை பூண்டோடு கருவறுக்கத் திட்டமிட்டுக் கோரமான இனப்படுகொலை நடத்திய சிங்களப் பேரினவாத கொடியோன் ராஜபக்சே அரசையும், அவன் கூட்டத்தையும் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்ற வேண்டும். அவர்களுக்கு தண்டனை தர வேண்டும். அதற்கு சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணையை அனைத்துலகம் நடத்த வேண்டும். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர தமிழ் ஈழத்திலும், தரணிவாழ் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். மனித குலத்தின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுகிற நாள்தான் பிப்ரவரி 26 ஆகும்'' என்றார்.
தமிழ் இயக்கத்தினர் பங்கேற்பு
இதில் திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குனர் புகழேந்தி, தங்கராஜ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் அதில் கலந்து கொண்டனர்.
பலத்த பாதுகாப்பு
இந்த போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மத்திய அரசை கண்டித்தும், தமிழ் ஈழத்தை வலியுறுத்தியும் பதாகையை கொண்டு வந்தனர். போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சீமானுக்கு கண்டனம்
இந்த போராட்டத்தை திசை திருப்பும் வகையில் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமானுக்கு வைகோ உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.