எத்தனை முயற்சிகள் செய்தாலும் தமிழகத்தை காவிமயமாக்க முடியாது.. கி. வீரமணி அதிரடி
எத்தனை முயற்சிகள் செய்தாலும் தமிழகத்தை காவி மயமாக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
சென்னை: எத்தனை முயற்சிகள் செய்தாலும் தமிழகத்தை காவிமயமாக்க முடியாது என்று சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசினார்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக கூட்டியது. அதில் வரும் 25ம் தேதி முழு அடைப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த போராட்டத்திற்கான விளக்கப் பொதுக் கூட்டம் சென்னை மயிலை மாங்கொல்லையில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூக நீதி இயக்கங்களும் பங்கேற்றுள்ளது.
கி. வீரமணி
இந்தக் கூட்டத்தில் கி. வீரமணி பேசியதாவது: பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப்பில் பொழுதுபோக்கும் இளைஞர்களே ஆபத்தை உணருங்கள். தமிழகத்தை ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில் இளைஞர்கள் திமுக பின்னால் திரள வேண்டும். திமுகவின் முழு அடைப்பு அழைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் தேர்தலிலும் இணையலாம். அனைவரும் இணைந்து தமிழகத்திற்கு வந்துள்ள ஆபத்தை தடுக்க வேண்டும். எத்தனை முயற்சிகள் செய்தாலும் தமிழகத்தை காவிமயமாக்க முடியாது என்று கி. வீரமணி கூறினார்.
முத்தரசன்
இதனைத் தொடர்ந்து முத்தரசன் பேசியதாவது: ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் விவசாய தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எந்த வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. மதுக்கடைகளை நெடுஞ்சாலைகளில் வைக்கக் கூடாது என்றால் உடனடியாக பெயர் மாற்றம் செய்து மதுக்கடைகளை அரசு திறக்கிறது.
பினாமி அரசு
25ம் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கியது மாநில அரசுதான். தமிழ்நாட்டில் பாஜகவின் பினாமி அரசு நடைபெற்று வருகிறது. குரங்கு ஆட்டுவது போல் மோடி ஆட்டிக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் அனைவரும் பாஜகவிடம் சரண்டர். அதிமுக என்ற பெயரில் பாஜக தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
துரோகம்
மத்திய அரசு செய்யும் துரோகத்திற்கு மாநில அரசு துணை போகிறது. இதனால் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. வரும் 25ம் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வராத கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.