களத்தில் குதித்தார் கமல்.. 4 மாவட்ட ரசிகர்களுடன் தீவிர ஆலோசனை.. பிப். 21 முதல் அரசியல்!
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னை: அரசியல் பயணத்திற்கு முன்னோட்டமாக நான்கு மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை துவக்க இருக்கிறேன் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் நடிகர் கமல். இது என் நாடு. இதை நான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மட்டும் இருந்தால் போதாது.
இங்கு தலைவன் என்பவன் வழி நடத்த மாத்திரமன்று. பின்பற்றவே தலைவன் இருக்க வேண்டும்.
பின் தொடர்வதற்கே ஒரு தலைமை ஒரு தலைமை பொறுப்பு இருக்க வேண்டும் நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களை சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.
இது ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டமா..? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா..? யாரின் ஆட்சி, யாரின் அரசு குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதைநோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். கரம் கோர்த்திருங்கள். களத்தில் சந்திப்போம் என்று கூறியிருந்தார் கமல்.
இந்த பயணத்திற்கு திட்டமிடுவது குறித்து நான்கு மாவட்ட ரசிகர்களுடன் கமல் இன்று ஆலோசனை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியானது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் மாவட்ட ரசிகர்களுடன் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கமல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நடிகர் கமல் வருகிற பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் தனது கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செல்கிறார். இந்த பயணத்திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பயண ஏற்பாடுகள் குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.