தமிழக வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ரூ 15 லட்சம் நன்கொடை
சென்னை மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ரூ 15 லட்சத்தை நடிகர் கமல்ஹாசன் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தை ஆட்டிப் படைத்த கனமழை தமிழக மக்களை ஒரு வழி செய்து விட்டது. நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழக மக்களை திடீரென்று நடுத்தெருவில் நிறுத்திய பெருமை மழையையே சேரும்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நடிக, நடிகையரும் உதவிகளை அளித்து வரும் நிலையில், நடிகர் கமல் ஹாசனும் வெள்ள நிவாரணத்திற்கு தற்போது நிதி அளித்திருக்கிறார்.
மக்களை வாட்டிய பேய்மழை
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை தமிழக மக்களை ஒரு வழி செய்து விட்டது. தமிழகம் முழுவதும் மழை பெய்தாலும் சென்னை மற்றும் கடலூர் மக்களை பெரும் துயரத்திற்கு இந்த மழை ஆளாக்கி விட்டது.
மக்களின் வரிப்பணம் எங்கே?
இந்நிலையில் "இந்த மழையால் ஒட்டுமொத்த சென்னையும் நிலைகுலைந்து போயிருக்கிறது. மக்கள் அளித்த வரிப்பணமெல்லாம் எங்கே போனது? என்று அரசை விமர்சித்து நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஓ பி எஸ்சின் பதிலடி
இதற்கு பதிலளித்த அமைச்சர் பன்னீர்செல்வம் "கமல் கருத்து கந்தசாமி, குழப்பும் பிதற்றவாதி. திடீரென்று ஏற்படும் இயற்கை அபாயங்களை உடனடியாக சரி செய்ய முடியாது. இந்த நிலையிலிருந்து மக்கள் படிப்படியாகத் தான் மீண்டு வரமுடியும். இது ஒன்றும் படமல்ல ஒரே காட்சியில் அனைத்தையும் சரி செய்வதற்கு" என்று கடுமையாக கமலை விமர்சனம் செய்தார்.
நான் அப்படி சொல்லவே இல்லை
இந்நிலையில் திடீரென்று நான் எந்தத் தனிப்பட்ட ஊடகத்திற்கும் அப்படி ஒரு பேட்டியை அளிக்கவில்லை. என் நண்பர் ஒருவருக்கு நான் எழுதிய ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம் அது. என் வரிப்பணம் என்னவாயிற்று என்றோ தமிழக அரசைப் பற்றியோ நான் எதுவும் குறிப்பிடவில்லை என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.
ஒரு வாரமாக பவர்கட்
இந்த வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில் நடிகர் கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு ஒரு வாரமாக கரண்ட் இல்லை என்று தொடர்ந்து செய்திகள் வெளியானது.
இன்று சரியானது
ஒரு வார பவர் கட் முடிந்து இன்று கமல்ஹாசனின் அலுவலகம் மற்றும் வீடு இரண்டிற்கும் கரண்ட் வந்ததாக அவரின் செய்தித்தொடர்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.
இதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை
சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டதற்கும் நடிகர் கமல்ஹாசன் விவகாரத்துக்கும் தொடர்பு இல்லைமழை பாதிப்பால் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததே மின்விநியோகத் தடைக்கு காரணம். என்று மின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
|
15 லட்சம் நன்கொடை
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சற்று முன் ரூ 15 லட்சத்தை தமிழக மக்களின் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.இந்தத் தொகையை கமல் தனது மேனேஜர் மூலம் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் கமல் ஒப்படைத்து இருக்கிறார்.