டெல்லியில் அடுத்தடுத்த ஜரூர் சந்திப்புகள்- தேர்தல் களத்தில் தனிமைப்படுத்தப்படுகிறதா திமுக?
தேர்தல் களத்தில் திமுகவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Recommended Video
சென்னை: டெல்லியில் அடுத்தடுத்து ஜரூராக நடைபெற்று வரும் சந்திப்புகள் தேர்தல் களத்தில் திமுகவை தனிமைப்படுத்தும் முயற்சியா? என சந்தேகிக்கிறது அறிவாலய தரப்பு.
காங்கிரஸ் தலைமையிலான அணியில்தான் திமுக இருந்து வந்தது. ஆனால் மெல்ல மெல்ல இரு கட்சிகளுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகரித்தது.
ஒருகட்டத்தில் திமுகவின் பாதை 3-வது அணியை நோக்கி நகரத் தொடங்கியது. இது பாஜகவுக்கு ஆதாயம் தரக் கூடிய முயற்சி என திமுகவின் கூட்டணி கட்சிகள் கூறின.
அத்துடன் திமுகவிடம் இருந்து மெல்ல இவை விலக தொடங்கின. இதன் அடுத்த கட்டமாக டெல்லியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்களை திமுகவின் கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் நீடிக்கும் எனவும் திருமாவளவன் அறிவித்தார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியது.
காங்கிரஸ், அமமுக, விசிக மற்றும் இடதுசாரிகள் இணைந்து திமுக- அதிமுகவுக்கு மாற்றாக புதிய அணியை கட்டமைக்கிறார்களா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா ஆகியோரை மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், காங்கிரஸுடனான தேர்தல் கூட்டணி குறித்து தேவைப்படும் நேரத்தில் பேசுவோம் என்று கூறினார். காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்படும் புதிய அணியில் மக்கள் நீதி மய்யமும் இடம்பெறக் கூடும் என்பதைத்தான் இந்த சந்திப்புகள் வெளிப்படுத்துகின்றன. அதாவது தமிழக தேர்தல் களத்தில் திமுகவை தனிமைப்படுத்தும் ஜரூரான சந்திப்புகள்தான் இவை என்பதையே வெளிப்படுத்துகிறது.