மாணவர்களிடம் தவறாக நடந்த வழக்கில் கைதான எச்.எம். - ஜாமீன் வழங்கியது மதுரை ஹைகோர்ட்
மதுரை: கன்னியாகுமரியில் தலைமையாசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்தவர் வளன். இவர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மாரநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலரிடம் இவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து, உதவி தொடக்கக்கல்வி அதிகாரி இந்திராணி விசாரணை நடத்தினார். அதன்பின்பு மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வளனை கைது செய்தனர். இதைதொடர்ந்து, தலைமை ஆசிரியர் வளன் ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், தனிப்பட்ட விரோதம் காரணமாக உதவி தொடக்கக்கல்வி அதிகாரி தன் மீது தவறான குற்றச்சாட்டை கூறி உள்ளார் என்று கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இ.சோமசுந்தரம் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.