மீனவர்களை மீட்க கோரி குழித்துறையில் 12 மணிநேரம் நடைபெற்ற எழுச்சிமிகு ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!!
ஓகி புயலில் சிக்கிய 1000-க்கும் அதிகமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி குழித்துறையில் 12 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற எழுச்சிமிகு போராட்டம் முடிவுக்கு வந்தது.
Recommended Video
குழித்துறை: ஓகி புயலில் சிக்கிய 1000-க்கும் அதிகமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி குழித்துறையில் 12 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற எழுச்சிமிகு போராட்டம் முடிவுக்கு வந்தது. தூத்தூர் பங்குத் தந்தையின் கோரிக்கையை ஏற்று நள்ளிரவில் மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முதல்வர் பழனிசாமி நேரில் வந்து உறுதியளிக்கக் கோரியும் குழித்துறை ரயில் நிலையத்தில் சுமார் 12 மணி நேரமாக 8 கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நண்பகல் 12 மணியளவில் தொடங்கிய போராட்டம் நள்ளிரவிலும் நீடித்தது.
மக்கள் ஏற்க மறுப்பு
காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார். எனினும் மக்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து கோஷமிட்டு வந்தனர்.
தேடுதல் வேட்டை தொடரும்
கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடுதல் வேட்டை தொடரும், மக்கள் அமைதி காக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார். ஆனால் நேற்று அளித்த வாக்குறுதியையே இன்றும் ஆட்சியர் அளிப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
மீனவர்கள் கொந்தளிப்பு
சேதத்தை சீர்படுத்த ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுமா, மக்கள் பிரச்னையை தீர்க்காத அமைச்சர் எதற்கு என்று மீனவர்கள் கடுமையான கொந்தளித்தனர். மாவட்ட ஆட்சியரால் எந்த தீர்வும் எட்டப்படாது, முதல்வர் வந்து உறுதியளிக்க வேண்டும் என்றனர்.
மக்கள் தீர்க்கம்
துப்பாக்கியால் சுட்டால் கூட ஒரு தீர்வு கிடைக்காத வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று மீனவர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட்னார். இத்தனை மக்களிடமும் பேச முடியாது முக்கியமான 10 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆட்சியர் விடுத்த அழைப்பை ஏற்கவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மறுத்தனர் இதனால் மாவட்ட ஆட்சியரின் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் தூத்தூர் பங்குத் தந்தை ஆண்ட்ரூஸ் விடுத்த அழைப்பை ஏற்று மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.இப்போராட்டம் வாபஸ் பெறப்ப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.