நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது: தொல்.திருமாவளவன்
நீதிபதி கர்ணனை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறுவது கண்டனத்திற்குரியது என்றும் அவருக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்குர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி என்பதால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் தலைமை நீதிபதி கூறியுள்ளார். நீதிபதி கர்ணன் பேட்டியை ஊடகங்கள் ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேற்கு வங்க போலீசார் உடனடியாக நீதிபதி கர்ணனை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீசார் காளஹஸ்தி விரைந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒரு நீதிபதியை எப்படி கைது செய்ய உத்தரவிட முடியும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிபதி கர்ணனை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறுவது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கர்ணனின் செயல் ஜனநாயகத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.