ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை தமிழக அரசு சட்டப்படி அணுகவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தை, தமிழக அரசு சட்டப்படி முறையாக அணுகவில்லை என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இடைக்கால தடை.....
கேள்வி:- நளினி உள்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதே?.
பதில்:- இந்த வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறும்போது, ‘‘எங்களது தீர்ப்பில், 3 குற்றவாளிகளின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. சம்பந்தப்பட்ட மாநில அரசு வழக்கமான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம். அந்த நடைமுறைகளின்படி, குற்றவாளிகள் முறைப்படி கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன்பின் மாநில அரசு சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்திடம் அறிக்கை கோரவேண்டும். அதன் பின்னரே உரிய முடிவெடுக்க வேண்டும். குற்றவாளிகள் விடுதலை செய்யப்படக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. எல்லாவற்றுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவற்றைத்தான் பின்பற்றவேண்டும். குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்க வேண்டும்'' என்றெல்லாம் நீதிபதி கூறியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, நம்முடைய மாநில அரசுதான் இந்தப் பிரச்சினையை சட்டப்படி முறையாக அணுகவில்லை என்று தெரிகிறது.
மியான்மர் சந்திப்பு....
கேள்வி:- மியான்மரில், இலங்கை அதிபர் ராஜபக்சேயை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்கப் போவதாகச் செய்தி வந்துள்ளதே?.
பதில்:- இலங்கையில் நடந்தது போர்க் குற்றங்கள்தான் என்றும், அதுகுறித்து சுதந்திரமான நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், இதுபற்றி இந்தியாவே தனித்தீர்மானம் ஒன்றினை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவர வேண்டுமென்றும், தமிழ் உணர்வு கொண்ட தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் ஒவ்வொரு தமிழனும் கேட்டுக்கொண்டிருக்கிற நேரத்தில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை அதிபரைச் சந்தித்துப் பேசுகிறார் என்பது தமிழர்களையும், தமிழ்நாட்டையும் புறக்கணிக்கின்ற செயலாகும். மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஏன்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
ராஜீவ்காந்தி சிலை உடைப்பு....
கேள்வி:- சென்னையில் 3 இடங்களில் ராஜீவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டது பற்றி?.
பதில்:- தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றவர்களை விடுதலை செய்வது பற்றி, உச்சநீதிமன்றமும், தமிழக அரசும் முடிவெடுத்த நிலையில், காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ள கருத்து தி.மு.க.விற்கு ஏற்கத்தக்கதல்ல என்ற போதிலும், ஆத்திர அவசரத்தில் என்ன செய்கிறோம் என்பதைச் சற்று எண்ணிப்பார்த்துத் தெரிந்து கொள்ளாமல், சென்னையில் 3 இடங்களிலும் ராஜீவ்காந்தி சிலைகளை உடைத்தது, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கே சென்று தாக்குதல் நடத்தியது போன்ற அரசியல் வன்முறைகளிலும், வக்கிரங்களிலும் தி.மு.க.வுக்கு உடன்பாடு எள்ளளவும் கிடையாது. அது எவ்வகையிலும் நியாயப்படுத்தத்தக்க சரியான நடைமுறையும் அல்ல என்பதுதான் நமது கருத்து. இப்படிப்பட்ட செயல்களை தமிழக அரசு அனுமதித்திருக்கவும் கூடாது. நுண்ணறிவுப் பிரிவின் மூலம் முன்கூட்டியே அறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்' என இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.