நானும், எம்ஜிஆரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்தோம்.. மறைவின் போத நெகிழ்ந்த கருணாநிதி
சென்னை: தானும் எம்ஜிஆரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்ததாக அவர் மறைந்தபோது வெளியிட்ட இரங்கல் கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் சட்டசபைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக வைரவிழாவு்ம கொண்டாடப்படுகிறது.
அதிமுகவும், திமுகவும் எதிரெதிர் துருவங்களாக தீவிரமாக இருந்த நிலையில், எம்ஜிஆர் குறித்து கருணாநிதி நெகிழ்ச்சியான கருத்துக்களை நினைவு கூர்ந்திருந்தார். எம்ஜிஆர் மறைந்தபோது அவருக்கு கருணாநிதி தெரிவித்த இரங்கல் இன்றும் நினைவு கூறக்கூடியது.
பெரும் துயரம்
அந்த இரங்கல் கடிதத்தில் கருணாநிதி கூறுகையில், இனிய நண்பர் எம்ஜிஆர் அவர்களின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியும், பெரும் துன்பமும் தாக்கிய நிலையில் உள்ளேன். கடந்த 1945-ஆம் ஆண்டு ராஜகுமாரி படத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாகவும், நான் வசனகர்த்தாவாகவும் இருந்தேன். எங்கள் இருவருக்குள் நட்பு உதயமானது.
ஒரே வீட்டில் தங்கினோம்
கோவை நகரில் நானும் அவரும் ஒரே வீட்டில்வாழ்ந்ததும் அரசியல் சமுதாய கருத்துகளை பரிமாறிக் கொண்டதும் கலை உலகில் இணைந்து பணியாற்றியதும், ஒரே இயக்கத்தில் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எங்கள் நட்பு தணிந்ததும் என்றென்னும் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகும்.
இரண்டற கலந்தோம்
அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம், புதுமைபித்தன், அரசிளங்குமரி போன்ற பல்வேறு திரைப்படங்களில் எங்களின் கலைத்துறை தோழமை கொடி கட்டி பறந்தது. கலைத் துறையில் கொண்டிருந்த அதே நட்புணர்வுடன் 1972 வரையில் அரசியல் துறையிலும் இரண்டற கலந்திருந்தோம்.
ஈடு இணையற்ற கதாநாயகன்
அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாறுதல்களிலேயே கூட எத்தனையோ கருத்து மாறுபாடுகளுக்கு இடையே எங்களின் நட்புறவு ஆழமாகவே இருந்தது. திரைப்படத் துறையில் தமிழகத்தில் ஈடு இணையற்ற கதாநாயகனாக திகழ்ந்தார். ஒரு புதிய சகாப்தத்தையும் படைத்தார். அவரை போல திரைப்படத் துறையை தன்வயப்படுத்திக் கொண்டு வெற்றி முரசு கொட்டிய நடிகர்கள் ஒரு சிலரே ஆவர்.
சலிப்பின்றி உழைத்தவர்
1972-இல் அவர் தொடங்கிய அதிமுக கட்சியை மிக குறுகிய காலத்திலேயே ஆளுங்கட்சியாக்கிய பெருமைக்குரியவர் அவர். 10 ஆண்டுகாலம் முதல்வராக பொறுப்பேற்றிருந்த அவர் 2-3 ஆண்டுகால உடல் நலிவுக்கு இடையிலும் சலிப்பின்றி உழைத்த உள்ள உறுதியை பாராட்டாதார் இருக்க முடியாது.
ஓய்வற்ற உழைப்பு
விடா முயற்சி, ஓய்வற்ற உழைப்பு இவற்றின் மூலம் மக்களின் செல்வாக்கை பெற்று ஒளிவிட்ட எனது ஆருயிர் நண்பனின் பிரிவினால் கண்ணீர் வடித்திடும் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலை ஜானகி அம்மாளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், அதிமுக இயக்கத்தின் உடன்பிறப்புகளுக்கும் தெரிவித்து கொள்கிறேன். இத்தகைய துயர சூழ்நிலையை ஒட்டி கசப்புணர்வு, காழ்ப்புணர்வுகளை தவிர்த்து அமைதியும், ஒற்றுமையும் கட்டிக் காக்கப்பட தமிழ் மக்கள் உறுதி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.