செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு பற்றி ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை: ஆளுநரிடம் கருணாநிதி மனு
சென்னை: ஆளுநர் ரோசையாவை இன்று மாலை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, செம்பரம்பாக்கம் ஏரி நீரை முன் அறிவிப்பின்றி அதிக அளவுக்கு திறந்துவிட்டதால் சென்னையில் அழிவு ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய 5 பக்க மனுவை அளித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக ஆளுநர் ரோசையாவை இன்று மாலை 5.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் சந்தித்தார். அவருடன், திமுக பொருளாளர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி ஆகியோரும் ரோசய்யாவை சந்தித்தநர்.
அப்போது, 5 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றை ஆளுநரிடம் கருணாநிதி கொடுத்தார். மழை நிவாரண பணிகளில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கருணாநிதி அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென முன் அறிவிப்பின்றி 35 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட்டதால் சென்னையில் பெரும் அழிவு ஏற்பட்டதாக வெளியான தகவல் குறித்து, ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மழையை எதிர்கொள்ள மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய கருணாநிதியிடம், வெள்ள சேத தடுப்பு விவகாரத்தில் ஹைகோர்ட் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ததோடு, நிவாரண பணிகளில், மத்திய, மாநில அரசுகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கருணாநிதி, நிவாரண பணிகள் பற்றி ஹைகோர்ட் நீதிபதிகள் கூறிய கருத்தில் உண்மையுள்ளது என்றார்.
ஆளுநர் ரோசய்யாவை கருணாநிதி சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.