100 கோடியில் தமிழ்த் தாய் சிலைன்னு சொன்னீங்களே, வச்சீங்களா?.. கருணாநிதி கேள்வி
மதுரை: ரூ. 100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என்று கூறினாரே முதல்வர் ஜெயலலிதா. அந்த சிலை எங்கே இருக்கிறது, எனக்குத் தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மதுரையில் பிரச்சாரம் செய்து பொதுக் கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சிலிருந்து சில...
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா. அந்த சிலை இப்போது எங்கே இருக்கிறது என எனக்கு தெரியவில்லை.
இது போன்ற பொய் மூட்டைகளை ஜெயலலிதா அவிழ்த்து விட்டு கடந்த 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறார். அவரின் பொய் மூட்டைகளுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. இதற்குமேல் ஜெயலலிதாவை நம்பினால், நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.
மதுரை முத்துவை நான் என்றும் மறப்பதில்லை. அவர் மேல் கொண்ட பற்று பாசம் காரணமாக மதுரையை மாநகராட்சியாக மாற்றி அவரையே மேயராக ஆக்கி பெருமைப்படுத்தியவன் நான். எனவே நான் மதுரையையும் மதுரை மக்களையும் நேசிப்பேன்.
மதுரை மாவட்டத்தின் வளர்ச்சிக்காகத்தான் சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். ஒரு சிலர் ராமர் மீது பழி போட்டு சேது சமுத்திர திட்டத்தை முடக்க முயற்சிக்கின்றனர்.
கரூர் அன்புநாதனிடம் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன். ஊழலின் பிறப்பிடமாக தற்போதைய ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களை பற்றி கவலைப்படாத அரசாக தற்போதைய ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் கிரானைட் ஊழல் வழக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் என்றார் கருணாநிதி.