சுயநலத்திற்காக சமுதாயத்தின் பெயரில் கட்சி... மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்கிறார் கொ.ஜ.க தலைவர்!
சென்னை: தங்கள் சுயநலத்திற்காக சமுதாயத்தின் பெயரில் கட்சி ஆரம்பித்து, திராவிடக் கட்சிகளிடம் பேரம் பேசுபவர்களுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்துள்ளார் கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் நெருங்கிவிட்டது. கும்பலைக் கூட்டி கூட்டம் எனக் காட்டி தேர்தலுக்கு தேர்தல் திராவிடக் கட்சிகளிடம் மாறி மாறி கூட்டணி பேசும் சமுதாயத்தின் பெயரில் கட்சிகள் நடத்தும் தலைவர்கள் முதல் லெட்டர் பேட்(Letter Pad) கட்சி தலைவர் வரை தாங்கள் சார்ந்த சமுதாயத்தின் பெயரில் லெட்டர் பேட்(Letter Pad)-ல் கட்சிப்பெயரை அடித்துக்கொண்டு பணத்திற்காகவும், பதவிக்காகவும் நீண்ட வரிசையில் காத்திருந்து திமுக,அண்ணா திமுக கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கொங்கு மண்டலத்திலும், கொங்கு சமுதாயத்தின் பெயரில் கட்சிகள் ஆரம்பித்து கூட்டணிக்கு அழைப்பு வராதா என்று கூனிக்குறுகி காத்துக் கிடக்கின்றார்கள். இவர்கள் சார்ந்த சமுதாயத்தின் மக்கள் இவர்கள் சுயநலத்தை நன்கு அறிவார்கள். இவர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும் மக்கள் இவர்களுக்கும், இவர்கள் சார்ந்த கட்சிக்கும் சரியான பாடம் புகட்டுவார்கள்.
48 ஆண்டு காலமாக தமிழக மக்களுக்கு மதுவையும், இலவசத்தையும் கொடுத்து, மனிதவளத்தை சீரழித்த திராவிடக்கட்சிகளுக்கு மாற்றம் தேவையென மக்கள் மனதார நினைக்கின்றார்கள். தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் மாற்றம் என்ற மந்திரச்சொல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
திராவிடம் போதாது என்று புதிதாக தேசிய திராவிடம் தமிழ்நாட்டைக் காப்பதாகக் கூறி கூட்டணி அமைத்தாலும், தேர்தலை சந்தித்தாலும் திராவிடம் என்ற வார்த்தையை மக்கள் நம்பத் தயாராக இல்லை.இல்லாத ஒன்றை இருப்பதாக மக்கள் எத்தனை காலத்திற்குத் தான் நம்பிக்கொண்டிருப்பார்கள்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.