குமரி அருகே பாஜக முன்னாள் நகரத் தலைவர் குத்திக் கொலை... பெண் விவகாரமா என விசாரணை
களக்காடு: குமரி மாவட்ட பாஜக முன்னாள் நகரத் தலைவர் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் தக்கலை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமாரதாஸ். பா.ஜ.க. முன்னாள் நகர தலைவரான இவர் சொந்தமாக வாடகைக்கு மினி லாரி வைத்து ஓட்டி வந்தார்.
நேற்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சிலர் நெல்லை களக்காடு பகுதிக்கு வாழைக்கன்றுகள் ஏற்ற வேண்டும் எனக்கூறி குமாரதாசை அழைத்துள்ளனர். பின்னர் அந்த நபர்களை குமாரதாஸ் ஏற்றிக் கொண்டு, களக்காடு நோக்கி மினி லாரியை ஓட்டி வந்தார்.
மினி லாரி களக்காடு அருகே கள்ளிகுளம் மங்கம்மாள் சாலை காட்டுப்பகுதியில் வந்தபோது அந்த நபர்கள் குமாரதாசிடம் மினி லாரியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
குமாரதாசும் மினி லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது திடீரென அந்த நபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் குமாரதாஸ் பலத்தகாயம் அடைந்த அவர் கொலை கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடியுள்ளார். எனினும் அந்த நபர்கள் அவரை தொடர்ந்து விரட்டி சென்று கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டனர்.
உடலில் வயிறு மற்றும் மார்பு பகுதியில் பலத்த கத்திகுத்து காயம் அடைந்த குமாரதாஸ் தனது செல்போன் மூலம் மனைவிக்கு தன்னை ஏமாற்றி சிலர் அழைத்து வந்து, கத்தியால் குத்திவிட்டதாகக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குமாரதாசின் மனைவி மல்லிகா தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தக்கலை போலீசார் குமாரதாஸ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மல்லிகாவிடம் விசாரணை நடத்தினர்.
எங்கிருந்து குமாரதாஸ் செல்போனில் தன்னுடைய மனைவியை தொடர்பு கொண்டு பேசினார் என்பதை, செல்போன் ‘சிக்னலை' வைத்து போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து களக்காடு போலீசார் குமாரதாசை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு அருகே கள்ளிகுளம் மங்கம்மாள் சாலை ஓரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் குமாரதாஸ் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதற்கிடையே தக்கலை போலீசாரும் களக்காட்டுக்கு வந்தனர். குமாரதாசின் உடலை போலீசார் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக குமாரதாஸ் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? மேலும் குமாரதாசுக்கு பெண் தொடர்பு ஏதும் உள்ளதா? அதில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டார? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை குற்றவாளிகளை பிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகளும், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குமரி மாவட்ட பா.ஜனதா பிரமுகர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.