கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: தமிழக அரசு மீது அவமதிப்பு வழக்கு
சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியது தொடர்பான வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ், பள்ளி கல்வித்துறை செயலாளர் சவிதா ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு நிவாரணமாக வழங்கியது.
இந்த நிலையில் நிவாரண தொகை குறைவாக உள்ளதாகவும், ஒவ்வொரு குழந்தையின் இறப்பினால் ஏற்படும் பாதிப்பை ஆய்வு செய்து இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்ய தனிநபர் கமிட்டி அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வக்கீல் இன்பராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் கமிட்டி அமைத்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பால் வசந்தகுமார், சத்திய நாராயணன் ஆகியோர் கடந்த ஏப்ரல் 22-ந் தேதி தீர்ப்பளித்தனர். அதில் தமிழக அரசு அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தும் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு தொகை நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் கமிட்டி அமைத்து தமிழக அரசு 2 வாரத்துக்குள் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
ஆனால் இதுவரை தமிழக அரசு அரசாணை ஏதும் பிறப்பிக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் இன்பராஜ் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை கமிஷன் அமைத்து அரசாணை பிறப்பிக்காத தமிழக தலைமை செயலாளர், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி பால் வசந்தகுமார், சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீலை பார்த்து நீதிபதிகள் இந்த உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் ஏதாவது செய்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு வக்கீல் இது குறித்து அரசிடம் கருத்து கேட்டு தெரிவிப்பதாகவும், அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கூறினார். வழக்கறிஞர் அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.