1984ல் எம்.ஜி.ஆரை காண வந்த இந்திரா காந்தி... 2016ல் ஜெயலலிதாவைக் காண வந்த ராகுல்காந்தி!
சென்னை: 1984 அக்டோபர் மாதம் அப்பல்லோவின் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆரைக் காண அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்னைக்கு வருகை தந்தார். 32 ஆண்டுகள் கழித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திரா காந்தியின் பேரன் ராகுல்காந்தி சென்னை வந்து அப்பல்லோ மருத்துவக்குழுவினருடம் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரித்து விட்டு சென்றுள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும், ஊடகங்களின் புண்ணியத்தால் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளர். கெடுபிடிகள் அதிகரித்துள்ளதால் நோயாளிகள்தான் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பற்றி விசாரிக்க தினசரியும் பிரபலங்கள் வந்து செல்வதால் ஊடகவியலாளர்கள் இரவு பகலாக ஷிப்ட் முறையில் பணி செய்து வருகின்றனர்.
இதே போன்ற ஒரு நிலை அப்பல்லோ மருத்துவமனையில் 1984ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நலம் பற்றி விசாரிக்க வந்தார் அப்போதய பிரதமர் இந்திராகாந்தி. இன்றைக்கு போல அன்றைக்கு இந்த அளவிற்கு ஊடகங்கள் இல்லை என்பதால் இந்த பரபரப்பு இல்லை.
1984ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அக்டோபர் 16ம் தேதி மாலை 4 மணிக்கு பிரதமர் இந்திரா காந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போலோ மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெறும் அறைக்குச் சென்று உடல் நலம் விசாரித்தார். பிறகு டாக்டர்களுடன் இந்திராகாந்தி 15 நிமிடங்கள் பேசினார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்த பிரதமர் இந்திரா காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, "அவர் இருக்கிற அறைக்குப் போனோம். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முயற்சி செய்தார். ஆனால் அவரை படுக்கையில் இருந்து எழவேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி மீண்டும் படுக்க வைத்தார்கள். எங்கள் எல்லோரையும் எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு கொண்டார்.
நான் அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். 'நீங்கள் ஒரு தைரியசாலி. கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தைரியமாக இருந்து அவற்றைச் சமாளித்து இருக்கிறீர்கள். அதுபோல இப்போதும் மன தைரியத்துடனும், ஊக்கத்துடனும் இருங்கள். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள மக்கள் எல்லோரும் நீங்கள் பூரண குணம் அடைய விரும்புகிறார்கள்' என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். புன்னகை செய்தார். எம்.ஜி.ஆரின் சிகிச்சைக்காக எல்லா உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது" என்று கூறினார் இந்திராகாந்தி.
கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பின்னர் அதேபோல ஒரு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவரைக் காண இந்திராகாந்தியின் பேரனும் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவருமான ராகுல்காந்தி வந்தார். ஆனால் அவரால் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை. மருத்துவர்களிடம் மட்டுமே பேச முடிந்து.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்த ராகுல்காந்தி இன்று நேரடியாக சென்னை வந்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களுக்குக் கூட ஆச்சரியமான விசயம்தான். அவர்களுக்கே கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. விமானம் மூலம் வந்தவர் காரில் அப்பல்லோ மருத்துவமனை சென்றார். அவருடன் திருநாவுக்கரசரும் சென்றார்.
அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுவினரை சந்தித்தார் ராகுல் .மருத்துவர்கள் அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள். ஒ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், உள்ளிட்ட தமிழக அமைச்சர்களையும் அப்பல்லோவில் சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்தவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நல்வாழ்த்துகளை தெரிவிக்க முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அப்போலோ மருத்துவமனைக்கு வந்தேன். முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் உடல்நலம் பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல்வர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று கூறினார். அன்று இந்திராகாந்தியினால் நேரடியாக சந்தித்து பேச முடிந்தது. ஆனால் இன்று ராகுல்காந்தியினால் ஜெயலலிதா இருந்த அறை பக்கம் கூட செல்ல முடியவில்லை என்பதுதான் கவலையான விசயம்.