உள்ளாட்சி தேர்தல்: வைகோவை போன்று விஜயகாந்தும் பாஜகவுக்கு ஆதரவு
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தனது கட்சி பாஜவுக்கு ஆதரவு அளிக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 18ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது. இதையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். உள்ளாட்சி தேர்தலில் தனது ஆதரவை பாஜகவுக்கு அளிப்பதாக வைகோ உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தலும், சில நகராட்சிகளுக்கான தலைவர் தேர்தலும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் இது போன்ற இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட வேண்டும் என்ற மரபு இருந்தாலும், இன்றைய ஆட்சியாளர்களின் அதிகாரத்தில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளது. அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமான பாரதீய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
மேலும் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் தேமுதிகவின் ஆதரவை கோரியுள்ளனர். அதன் அடிப்படையில் தேமுதிக 18-ந் தேதி அன்று நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு முழு ஆதரவை வழங்கும் என தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications