நேற்று ஸ்டாலின்... இன்று தம்பிதுரை... பரபர ஆளுநர் மாளிகை!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் இன்று லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார்.
சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை லோக்பா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று சந்தித்தார். நட்பு ரீதியில் அவரை சந்தித்ததாக தம்பிதுரை தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் ரகசிய வாக்கெடுப்பு கோரி நீதிமன்றத்திலும் திமுக மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் தனியார் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி அதிமுக எம்எல்ஏ-க்கள் சரவணன், கனகராஜ் ஆகியோர் மீது ரகசிய கண்காணிப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது. கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டது அம்பலமானது.
இதனிடையே மானியக் கோரிக்கைகள் தொடர்பாக சட்டசபை கூடியது. அப்போது கூவத்தூர் பேரம் தொடர்பாக விவாதிக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். ஆதாரத்துடன் கோரியும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவை முக ஸ்டாலின் நேற்று சந்தித்தார்.
அப்போது கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டதால் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளதால் அதிமுக அரசை கலைத்து விட்டு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் மனு அளித்தார்.
இந்த சூழ்நிலையில் ஆளுநர் மாளிகையில் வித்யாசாகர் ராவை லோக்சபை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று சந்தித்து பேசினார். இதன் பீன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, மரியாதை நிமித்தமாகவே ஆளுநரை சந்தித்தேன் என்றார்.