ஓ.பன்னீர் செல்வம் ரொம்ப நல்லவர்…. ஆனால் வல்லவரா?: மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ரொம்ப நல்லவர் ஆனால் அவர் வல்லவரா என்பதை நிரூபிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மழை, வெள்ள நிவாரணம், சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு, முதல்வர் மாற்றம், திமுக உள்கட்சி மோதல், அழகிரி ரீ.என்ட்ரி என பல கேள்விகளுக்கு தனியார் டிவி ஒன்றில் பேட்டியளித்தார் ஸ்டாலின்.
மழைக்கால மாலை நேரத்தில் சூடாகவும், அதே சமயம் ஆளுங்கட்சியின் செயல்பாட்டினை விமர்ச்சிக்கும் வகையிலும் அமைந்திருந்தது ஸ்டாலினின் பேட்டி. மேற்கொண்டு படியுங்களேன்.
மாநகராட்சி சரியில்லை
அம்மா உணவகத்தைப் பற்றித்தான் மாநகராட்சி அதிகாரிகள் கவலைப்படுகின்றனர். ஆனால் மழை, வெள்ளத்திற்கு சரியான நிவாரணம் அளிக்கவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அக்கறையில்லை.
அதிமுகவினர் அராஜகம்
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட உடன் அதிமுகவினர் அராஜகச் செயல்களில் ஈடுபட்டனர். நினைத்த இடங்களில்
உண்ணாவிரதம் இருந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினர்.
ஆட்சியை கலைக்க கூறவில்லை
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காக்கவே மத்திய அரசை நாடினோம். ஆட்சியை கலைக்கவேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை.
யாருடன் கூட்டணி
கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேர்தல் கமிஷனுடனும், அரசாங்கத்துடனும் கூட்டணி அமைத்திருந்தார். அதனால்தான் அவரால் எளிதில் வெற்றி பெற முடிந்தது.
ஆணவத்திற்கு கிடைத்த அடி
தேர்தல் களத்தில் எதிரிகளையே கணோம் என்று ஆணவத்தோடு அவர் கூறினார். அதற்கு சரியான அடி கிடைத்துள்ளது. அவர்தான் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில் இருக்கிறார்.
ரொம்ப நல்லவர்
தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மிகவும் நல்லவர். ஆனால் அவர் வல்லவரா என்று நிரூபிக்க வேண்டும். இன்னமும் அவரது அறைமுன்பு நிதியமைச்சர் என்ற போர்டுதான் வைக்கப்பட்டுள்ளது.
யார் முதல்வர்
பதவி இழந்த பின்னர் ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று கூறினால், ஓ.பன்னீர் செல்வம் யார்? மக்களை அவமானப்படுத்துகின்றனரா?
2016 ஸ்டாலின்
2016ல் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் போது தலைவர் கருணாநிதிதான் முதல்வர். அவர்தான் கட்சியின் தலைவர். இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
ஊடகங்கள் ஆதரவு
இன்றைக்கும் திமுகவைத்தான் ஊடகங்கள் விமர்சிக்கின்றன. மூன்றாண்டுகால அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வதில்லை.
பாமக உடன் நெருக்கம்
அரசியலில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நட்பை பேணவேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம். பாமகவும் அதையே விரும்புகிறது. இதில் அரசியல் எதுவும் இல்லை.
நெருப்பை மூட்டாதீர்கள்
திமுகவிற்குள் உள்கட்சி பூசல் உள்ளது என்று ஊடகங்கள்தான் நெருப்பை மூட்டுகின்றன. 5 பேர் இருக்கும் குடும்பத்திற்குள் கூட பிரச்சினை உள்ளது. ஆயிரக்கணக்கானோர் உள்ள இடத்தில் பிரச்சினை வராதா?.
மீண்டும் அழகிரி
திமுகவிற்குள் மீண்டும் அழகிரி வருவாரா? மாட்டாரா என்பதை நான் கூற முடியாது. தலைவர் கருணாநிதியின் கருத்துக்கு ஒருபோதும் மாற்றுக் கருத்து கூற முடியாது என்றும் பட்டும் படாமல் கூறி பேட்டியை முடித்தார் மு.க.ஸ்டாலின்.