தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து விஜயகாந்த் வழக்கு: ஜெ. வுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதாவிற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தாக்கல் செய்த மனுவில், மாநில தலைமை தகவல் ஆணையராக ராமானுஜம், ஆணையர்களாக தட்சிணாமூர்த்தி, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு முரணாக, இந்த நியமனங்கள் உள்ளன. சட்டப்பூர்வமான குழு கூட்டம், முறையாக கூட்டப்படவில்லை; எனவே, இந்த நியமனங்கள் சட்டவிரோதமானது.
கடந்த 6ம் தேதி, குழு கூட்டம் நடத்த, முதல்வர் சம்மதம் தெரிவித்திருப்பாக, கடந்த 1ம் தேதி, பணியாளர்கள் நலத் துறையின் முதன்மை செயலர், எனக்கு கடிதம் அனுப்பினார்.அந்த கடிதத்தை, 2ம் தேதி, என் தனிச் செயலர் பெற்றார். அதற்கு முன்பாக, என் வசதி, ஒப்புதல் எதையும் கேட்கவில்லை. கடிதத்தில், குழுவின் மூன்றாவது நபர் பற்றியும் குறிப்பிடப்படவில்லை; விண்ணப்பதாரர்கள் பற்றிய விவரங்களும் இல்லை.
வேண்டுமென்றே, விண்ணப்பதாரர்களின் விவரங்களை, கடிதத்தில் குறிப்பிடவில்லை. எனவே, அந்த கடிதம் செல்லுபடியாகும் என, கருத முடியாது.மேலும், 6ம் தேதி, மதுவிலக்கு கோரி, மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என, 31ம் தேதி நடந்த, கட்சியின் உயர்மட்டக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது. அவசரகதியில், ரகசியமாக குழு கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. சட்டப்படி, குழு அமைக்கப்படாததால், அதன் பரிந்துரைகளும் செல்லாது.
ஆளுங்கட்சிக்கு, அரசுக்கு செய்த சேவைக்காக, மூன்று பேருக்கும் அனுகூலம் செய்யப்பட்டு உள்ளது. தலைமை ஆணையர் மற்றும் ஆணையர்களாக பதவி வகிக்க, இவர்களுக்கு தகுதியில்லை.எனவே, தலைமை ஆணையர் மற்றும் ஆணையர்களாக செயல்பட, மூவருக்கும் தடை விதிக்க வேண்டும். நியமனம் செல்லாது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இம்மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்குடன் இணைந்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.