பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு பறிபோனது 3 லட்ச ரூபாய்!
திசையன்விளை: திசையன்விளையில் கீழே கிடந்த 10 ரூபாயை எடுத்த ஆசிரியரின் 3 ரூபாய் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திசையன்விளை அருகேயுள்ள மூடவன்குளத்தை சேர்ந்தவர் பெருமாள். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் காலை பைக்கில் மனைவி லட்சுமி மற்றும் பேரனுடன் திசையன்விளை மெயின் பஜாரில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிக்கு வந்தார்.
அங்கு நகை அடகு வைத்து ரூபாய் 2 லட்சத்து 59 ஆயிரம் பெற்றார். மேலும் மற்றொரு வங்கியில் உள்ள நகையை திரும்புவதற்காக வீட்டிலிருந்து ரூபாய் 56 ஆயிரம் கொண்டு வந்திருந்தார்.
மொத்தம் ரூபாய் 3 லட்சத்து 15 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து கொண்டு வங்கியிலிருந்து அவர் வெளியே வந்தார். அப்போது வங்கி முன்பு 10 ரூபாய் நோட்டு கீழே கிடந்தது.
அங்கு நின்ற ஒருவர் உங்கள் பணம் கீழே கிடக்கிறது என்று கூறவே பெருமாள் தன்னிடம் இருந்த கைப்பையை பைக் சீட்டில் வைத்து விட்டு கீழே குனிந்து நோட்டை எடுத்தார். அப்போது பைக்கில் இருந்த ரூபாய் 3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் அங்குள்ளவர்களுடன் கொள்ளையர்களை தேடினார்.
ஆனால் அதற்குள் அந்த நபர் மாயமாகி விட்டார். திருட்டு போன பணப்பையி்ல் வங்கி பாஸ் புக், ஏடிஎம் கார்டும் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் ரத்னராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.