பணி நிரந்தரம் செய்யக் கோரி புகைக்கூண்டில் ஏறி நின்று வாலிபர் தற்கொலை முயற்சி
சேலம்: சேலத்தில் புகைக்கூண்டில் இருந்து விழுந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த மனிதரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ஜங்சன் அருகில் உள்ள மாமாங்கத்தில் பர்ன் அண்ட் கோ என்ற நிறுவனம் உள்ளது.
இங்கு 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
பணி நிரந்தரம்:
இந்த நிலையில் இங்கு பணியாற்றும் 120 தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கோர்ட்டும் விசாரித்து பணி நிரந்தர செய்ய உத்தரவிட்டுள்ளது.
நிர்வாகிகள் வலியுறுத்தல்:
ஆனால் இன்னமும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. 120 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய தொழிலாளர் மறு வாழ்வு முன்னேற்ற சங்கம் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.
சக தொழிலாளி:
இந்த நிலையில் 120 தொழிலாளர்களில் ஒருவரான சேலம் தண்ணீர்த் தொட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் . இன்று காலை 6.30 மணிக்கு பர்ன் அண்ட் கோ நிறுவனத்திற்கு வந்தார்.
ராட்சத கூண்டில் நின்று போராட்டம்:
பின்னர் கம்பெனியில் உள்ள 300 அடி உயரம் உள்ள ராட்சத புகை கூண்டில் ஏறினார். அவர் புகை கூண்டுக்கு மேலே நின்றுக் கொண்டு 120 பணியாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டார்.
சமாதனம் ஆகவில்லை:
உடனே அங்கு தொழிலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் விரைந்து வந்து சமாதானப்படுத்தினர். ஆனால் பாலசுப்பிரமணியம் சமாதானம் அடையவில்லை.
இதுகுறித்து சூரமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே உதவி கமிஷனர் விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சமரச பேச்சு வார்த்தை:
சூரமங்கலம் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளியிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது.
புகார் மனு:
இதைத் தவிர புகைக் கூண்டுக்கு ஏறுவதற்கு முன்பாக புகார் மனு ஒன்றை மற்ற தொழிலாளர்களிடம் கொடுத்து சென்றுள்ளார். அந்த புகார் மனுவில் அவர் சில கோரிக்கைகளைப் பட்டியல் இட்டுள்ளார்.
வாழ்க்கை கேள்விக்குறி:
அதன்படி, சேலம் மாவட்டத்தில் செயில் நிறுவனமாக இயங்கி வரும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் ஒரு சில அதிகாரிகள் ஆதிக்கத்தால் 121 ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்வி குறியாக உள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டும்.
தற்கொலை நிச்சயம்:
எனது மனைவி பிள்ளைகளை இழந்தாலும் சரி, என் உயிரை தியாகம் செய்தாவது இந்த தொழிலாளர்களுக்கு நீதி கிடைத்திட முடிவு செய்துள்ளேன். கம்பெனிக்குள் என்.ஆர்.கே. பகுதியில் சிமிழி என்று சொல்லப்பட்ட சுமார் 200 அடிக்கு உயரமான சிமிழி மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன். 121 தொழிலாளர்களுக்கும் கோர்ட்டு தீர்ப்புபடி தீர்வு இருக்குமானால் தற்கொலை முயற்சி கைவிடுவேன்" இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.